லிஸ்ட்-லயே இல்லையே... உயிரை காவு வாங்கும் புதுவித காய்ச்சல்... ஈராக்கை அச்சுறுத்தும் உண்ணிகள்..!

By Kevin KaarkiFirst Published May 29, 2022, 11:39 AM IST
Highlights

ஐந்தில் இரண்டு பேர் இந்த காய்ச்சல் மூலம் உயிரிழக்கும் அபாயம் உள்ளது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஈராக் நாட்டில் கிரீமியன் காங்கோ ஹீமோஹாகிக் காய்ச்சல் (CCHF) பரவி வருகிறது. இந்த காய்ச்சல் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. இந்த வகையான காய்ச்சல் மனிதர்களின் மூக்கில் இருந்து இரத்தம் வழிய செய்து, உயிரை கொள்கிறது. இதன் காரணமாக ஈராக் சுகாதார ஊழியர்கள் முழுமையான பாதுகாப்பு உடை அணிந்தபடி மாடுகளுக்கு நோய் தடுப்பான்களை தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த ஆண்டு மட்டும் ஈராக்கில் 111 பேருக்கு CCHF காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், 19 பேர் இந்த காய்ச்சலுக்கு உயிரிழந்தனர் என உலக சுகாதார மையம் தெரிவித்து உள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுத்து இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவே இல்லை. இந்த காய்ச்சில் மூக்கு வழியாகவோ அல்லது உடலின் உள்ளேயே இரத்தப் போக்கு ஏற்படச் செய்யும். ஐந்தில் இரண்டு பேர் இந்த காய்ச்சல் மூலம் உயிரிழக்கும் அபாயம் உள்ளது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

பலமடங்கு அதிகரிப்பு:

இந்த காய்ச்சல் மூலம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் பலமடங்கு அதிகரித்து இருக்கிறது. ஈராக்கின் தெற்கு பகுதியில் உள்ள விவசாய பகுதியில் இந்த வகையான காய்ச்சலுக்கு பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஈராக்கின் மொத்த பாதிப்புகளில் ஐம்பது சதவீத பாதிப்புகள் இந்த பகுதிகளில் வசிப்போருக்கு ஏற்பட்டு உள்ளது. முந்தைய ஆண்டுகளில் இந்த பாதிப்பை விரல் விட்டு எண்ணும் நிலையிலேயே இருந்து வந்தது.

கிரீமியன் காங்கோ ஹீமோஹாகிக் காய்ச்சல் ஆனது உண்ணிகள் மூலம் வனவிலங்கு மற்றும் வீட்டில் வளர்க்கப்படும் எருமை, பசு, ஆடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு பரவுகிறது. பின் இந்த விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தி, உயிரை பறித்து விடுகிறது.

மொத்த பாதிப்பு:

ஈராக்கின் அல் புஜாரி பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு இந்த காய்ச்சல் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. இதை அடுத்து சுகாதார ஊழியர்கள் அந்த பகுதியில் இருக்கும் விலங்குகளின் மீது பூச்சிக் கொல்லிகளை தெளித்தனர். இவ்வாறு செய்யும் போது சுகாதார ஊழியர்கள் உச்சந் தலை முதல் பாதம் வரை உடல்  முழுக்க பாதுகாப்பு உடைகளை அணிந்து வந்தனர். 

1979 ஆண்டு ஈராக்கில் இந்த காய்ச்சல் முதல் முறையாக கண்டறியப்பட்டது. அன்று முதல் இந்த காய்ச்சல் இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தாத நிலையில், இந்த ஆண்டு பாதிப்பு எண்ணிக்கை பெருளவு அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டு மொத்தத்தில் 16 பேர் இந்த காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்ட நிலையில், ஏழு பேர் இதற்கு உயிரிழந்தனர். ஆனால் இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 43 ஆக அதிகரித்து இருக்கிறது. மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை எட்டாக அதிகரித்து உள்ளது. 

click me!