
இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட 'ஆபரேஷன் ஸ்கிரீன் ரிமூவல்' (Operation Screen Removal) மூலம் 212 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக இணையவழி குற்றப்பிரிவின் கூடுதல் இயக்குநர் சந்தீப் மிட்டல் தெரிவித்துள்ளார்.
தேசிய சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு மாத விழா, இணையவழி குற்றப்பிரிவு மற்றும் தேசிய குற்றவியல் அறிவியல் பல்கலைக்கழகம் (NFSU) இணைந்து நடத்திய நிகழ்வின் மூலம் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், இணையவழி குற்றப்பிரிவின் கூடுதல் இயக்குநர் டாக்டர். சந்தீப் மிட்டல், NFSU, சென்னை வளாக ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் (டாக்டர்) தீபக் ராஜ் ராவ் மற்றும் இரு துறைகளின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
விழாவில் உரையாற்றிய கூடுதல் காவல் இயக்குநர் டாக்டர். சந்தீப் மிட்டல், சைபர் குற்றங்களைத் தடுப்பதில் இணையவழி குற்றப்பிரிவு ஆற்றியுள்ள பணிகள் குறித்து விளக்கினார்.
"எங்கள் சைபர் ரோந்து குழு, பணம் பறிக்கும் சைபர் மோசடிகளால் பாதிக்கப்பட்ட 428 நபர்களை மேலும் பணம் செலுத்தாமல் முன்கூட்டியே தடுத்துள்ளது. இதன் மூலம் சுமார் ₹1000 கோடி ரூபாய் (ஒரு ஆயிரம் கோடி ரூபாய்) பெரும் நிதி இழப்பு தடுக்கப்பட்டுள்ளது," என்று அவர் தெரிவித்தார்.
இந்தக் குழு 1,277 சைபர் நிதி மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் கணக்குகளை முடக்கியுள்ளது.
மேலும், 2025-ஆம் ஆண்டில் சைபர் குற்ற வழக்குகளில் மொத்தம் 952 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், 27 சைபர் குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் (கூண்டாஸ் சட்டம்) கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட 'ஆபரேஷன் ஸ்கிரீன் ரிமூவல்' (Operation Screen Removal) மூலம் 212 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் நடத்தப்பட்ட 'ஆபரேஷன் ஹைட்ரா' (Operation Hydra) மூலம் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டாக்டர் சந்தீப் மிட்டல் தனது உரையில், "விழிப்புணர்வு உங்கள் சிறந்த பாதுகாப்பு" என்றும், "நீங்கள் பகிரும் விஷயத்தில் நெறிமுறையுடன் இருக்க வேண்டும்" என்றும் வலியுறுத்தினார். "தனியுரிமை என்பது டிஜிட்டல் உலகில் உங்கள் மிகச் சக்திவாய்ந்த கவசம். சைபர் சுகாதாரத்தை கடைபிடிக்க மிகுந்த ஒழுக்கத்துடன் செயல்பட வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்," என்றும் அவர் அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து சந்தீப் மிட்டல் பொதுமக்கள் சைபர் குற்றங்களில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க சில ஆலோசனைகளையும் வழங்கினார்.
நீங்கள் ஏதேனும் இணையவழி குற்றத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கண்டறிந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிதி மோசடிகள் ஏற்பட்டால் இணையவழி கிரைம் உதவி எண் 1930ஐ டயல் செய்யவும்.
அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கவும்.