பாஜக எம்பிக்களை மிரட்டிய சீனா..!! தைவான் குடியரசுத் தலைவருக்கு வாழ்த்து கூறியதால் காட்டம்..!!

By Ezhilarasan BabuFirst Published May 25, 2020, 2:20 PM IST
Highlights

சாய் இங் வென்னுக்கு  லேகி மற்றும் கஸ்வான் வாழ்த்து கூறியது முற்றிலும் தவறான நடவடிக்கை , இது  உடனே சரி செய்யப்பட வேண்டும் , 

ஆளும் பாஜக அரசின் எம்பிக்கள்  தைவான் குடியரசுத் தலைவர் பதிவியேற்பு விழாவில் கலந்து கொண்டதால்  ஆத்திரமடைந்துள்ள  சீனா இதுபோன்ற செயல்களிலிருந்து விலகி இருக்குமாறு இந்தியாவை எச்சரித்துள்ளது.  தென்சீனக் கடல் பகுதியை ஒட்டியுள்ள தைவானை சீனா தனது காலனி நாடாக பாவித்து வருகிறது .  ஆனால் தைவான் தன்னை சுதந்திர நாடு என பிரகடனம் செய்துள்ள நிலையில் ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன்,  உள்ளிட்ட நாடுகள் அதை தனி நாடாக அங்கீகரித்துள்ளன.  ஆனால் பெரும்பாலான நாடுகள்  தைவானின் சுதந்திரப் பிரகடனத்தை ஆதரிக்கவில்லை.   இந்நிலையில் தைவான் குடியரசுத் தலைவர்  பதவிக்கானதேர்தல் நடைபெற்று,  " சாய் இங் வென் " இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை அவரது பதவியேற்பு விழா நடைபெற்றது ,  இதில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ,   சாய் இங் வென்க்கு அமெரிக்காவின் சார்பில் தனது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.  இதில் ஆத்திரமடைந்த சீனா தைவான் ,  சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி,  தைவானில் பிரிவினையை சீனா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. 

இது சீனாவின் உள்விவகாரம் ,  அமெரிக்கா இதுபோன்ற தலையீடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் . தைவானில் இறையாண்மையை காப்பாற்ற சீனா ராணுவ நடவடிக்கையில் இறங்கவும் தயங்காது என அமெரிக்காவுக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது . இந்நிலையில் சாய் இங் வென்னின் பதவியேற்பு   விழாவில் கலந்து கொள்ளுமாறு தைவான் இந்தியாவிற்கு அழைப்பு விடுத்தது ,  அதில் 92 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு  வென்னுக்கு வாழ்த்துக் கூறினர்,  இந்தியா அதில் அதிகாரப்பூர்வமாக கலந்து கொள்ளவில்லை என்றாலும் , அனைவராலும் அறியப்பட்ட பாஜகவின் முக்கிய எம்பிக்களான மீனாட்சி லேகி மற்றும் கஸ்வான் உள்ளிட்டோர் அதில் கலந்து கொண்டனர். இது சீனாவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது,  இதனால் தைவானின் குடியரசுத் தலைவர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட நாடுகளுக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு பொதுவான கண்டனத்தை வெளியிட்டுள்ளது. சீன மக்களின்  நியாயமான காரணத்தை ஆதரிப்பவர்கள் தைவான் சுதந்திரத்திற்கான பிரிவினைவாத நடவடிக்கைகளை எதிர்க்கவும் , தேசிய மறு ஒருங்கிணைப்பை உணரவும் செய்வார்கள் என தனது ஆட்சேபத்தை தெரிவித்துள்ளது . 

இந்நிலையில் டில்லியில் உள்ள சீன தூதரின் ஆலோசகர் " லியு பிங் " இந்த விழாவில் இந்தியா  பங்கேற்றதை எதிர்த்து பாஜக எம்பிக்கள் லேகி மற்றும்  கஸ்வான் ஆகியோருக்கு கடிதம் மூலம் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் . அந்தக் கடிதத்தில்  ஜனாதிபதி " சாய் இங் வென்னுக்கு  லேகி மற்றும் கஸ்வான் வாழ்த்து கூறியது முற்றிலும் தவறான நடவடிக்கை , இது  உடனே சரி செய்யப்பட வேண்டும் ,  70 ஆண்டுகளுக்கு முன்பு இரு தரப்பு உறவுகள்  நிறுவப்பட்டதிலிருந்து  சீன கொள்கையைப் பின்பற்றுவதாக இந்திய அரசாங்கங்கள் உறுதியளித்துள்ளன என்பதை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நினைவுபடுத்துகிறோம். தைவான் ஜனாதிபதிக்கு வாழ்த்துச் செய்தி போன்ற  நடவடிக்கைகள், சீன-தைவான் பிரிவினைவாதிகளை ஊக்குவிக்கும் . இது இறுதியில் பிராந்தியத்தின் அமைதியையும் செழிப்பையும் பாதிக்கும் என்பதை பாஜக எம்பிக்க்கள் புரிந்துகொள்ள வேண்டும்.  பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுபோன்ற செயல்களில் இருந்து விலகி சீனாவின் ஒருமைப்பாட்டை ஆதரிக்க நல்லது செய்யுங்கள் என்று அவர் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.  சாய் ஜனாதிபதி அல்ல ,  சீனாவின் தைவான் என்ற மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.  சீனாவின் ஒரு தீவு மாநிலமே தைவான் என்பதை பாஜக எம்பிக்கள் புரிந்துகொள்ளவேண்டும் எனவும் லியு கடுமையாக வலியுறுத்தியுள்ளார். 
 

click me!