இந்திய எல்லையில் பாதுகாப்பு கட்டமைப்புகளை வேகமாக அமைக்கிறது சீனா..!! போருக்கு தயாராகிறதா என அச்சம்.

By Ezhilarasan BabuFirst Published Sep 22, 2020, 1:33 PM IST
Highlights

இந்த நடவடிக்கையின் மூலம் எல்லையை கட்டுப்படுத்த சீனா முயற்சிக்கிறது என்றும், அதன் ராணுவ கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு இன்னும் நீண்ட காலம் ஆகலாம் என்றும் தெரிவித்துள்ளார்.


இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக இந்திய-சீன எல்லையை ஒட்டிய பகுதிகளில் சீனா தொடர்ந்து ராணுவ கட்டமைப்பை அதிகரித்து வருவதாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

சீனா விமான நிலையங்கள், வான் பாதுகாப்பு நிலையங்கள் மற்றும் ஹெலிபேடுகளின் எண்ணிக்கையை சீனா இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் டோக்லாமில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு சீனா தனது  பாதுகாப்பு  யுக்தியை மாற்றியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. கடந்த ஜூன் 15ஆம் தேதி இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து சீன ராணுவத்தினர் நடத்திய வன்முறை தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். அதைத்தொடர்ந்து இரு நாடுகளும் எல்லையில் படைகளைக் குவித்ததால் போர் பதட்டம் அதிகரித்தது. எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற சூழல்  நிலவியது. அதற்கிடையை இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டையடுத்து இரு நாடுகளும் எல்லையில் இருந்து படைகளை பின்வாங்குவது என ஒப்புக் கொள்ளப்பட்டன. 

சர்ச்சைக்குரிய கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதியில் இருந்து சீனா படைகளை பின் வாங்கினாலும், விரல் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து படைகளை பின் வாங்க மறுத்து வருகிறது. இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் 11- தேதி வாக்கில் மீண்டும் சீனப் படைகள் அத்துமீற முயற்சித்து அது தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் இருநாட்டு எல்லையில் மீண்டும் போர் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. இந்நிலையில் உலகின் பிரபலமான புவிசார் அரசியல் புலனாய்வு தளமான ஸ்ட்ராட்போர் தளம்  அதிர்ச்சி தரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது டோக்லாம் சம்பவத்துக்கு பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய எல்லையில் சீனா தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை இரட்டிப்பாக்கி உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த ராணுவ கட்டமைப்பு இந்தியாவின் பாதுகாப்பில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அது தெரிவித்துள்ளது. அந்த ஆய்வறிக்கையின் ஆசிரியர்  சிம் தக் கூறுகையில், இந்திய சீன எல்லையில் சீனா தனது ராணுவ கட்டமைப்புகளை அதிகபடுத்தி இருப்பது இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் முயற்சி என கூறியுள்ளார். 

இந்த நடவடிக்கையின் மூலம் எல்லையை கட்டுப்படுத்த சீனா முயற்சிக்கிறது என்றும், அதன் ராணுவ கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு இன்னும் நீண்ட காலம் ஆகலாம் என்றும் தெரிவித்துள்ளார். பெரும்பாலான நேரங்களில் ராணுவ உட்கட்டமைப்பை விரிவாக்கம் செயவது மற்றும் பாதுகாப்பு கட்டுமானம் போன்ற நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டு வருகிறது,  இந்திய எல்லையில் நாம் காணும் சீன ராணுவத்தின் நடவடிக்கைகள் ஒரு நீண்டகால நோக்கத்திற்கான ஆரம்பம் என்றும்,  இந்திய எல்லைக்கு அருகே சீனா குறைந்தது 13 புதிய ராணுவ நிலைகளை நிர்மாணித்து உள்ளது. என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதில் 3 விமான தளங்கள், 5 நிரந்தர வான் பாதுகாப்பு நிலையங்கள் மற்றும் 5 விமானம் அல்லது ஹெலிகாப்டர்கள் தரை இறங்குவதற்கு தயாரிக்கப்பட்டுள்ள தளங்கள் ஆகியவை இதில் அடங்கும். கடந்த மே மாதத்தில் லடாக் தாக்குதலுக்கு பிறகு நான்கு புதிய ஹெலிபேடுகளின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

click me!