சீனாவில் ஆண்களிடம் இரத்த மாதிரிகள் கேட்கப்படுகின்றன. வடக்கு சீனாவில் உள்ள ஒரு நகரமான ஜிலின்ஹாட்டில் உள்ள போலீசார், ஒரு பெரிய டிஎன்ஏ தகவல்தளத்தை உருவாக்க அனைத்து ஆண் குடிமகன்களிடம் இருந்தும் கட்டாயமாக இரத்த மாதிரிகளை சேகரிப்பதாக அறிவித்தனர். பொது பாதுகாப்பை வலுப்படுத்தவும், குடிமக்கள் தகவல்களை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை அவசியம் என்று காவல்துறை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனாலும், இந்த நடவடிக்கை சீனாவில் சட்டம், தனியுரிமை குறித்த விவாதத்தைத் தூண்டியுள்ளது. இது சீனாவில் இதற்கு முன்பு நடந்ததில்லை என்றும், சர்வதேச முன்னுதாரணமும் இல்லை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். தகவல்களின்படி, இரத்த மாதிரிகள் பாஸ்போர்ட், தேசிய அடையாள அட்டைகள், பிற ஆவணங்களுடன் நேரடியாக இணைக்கப்படும். இந்த அமைப்பு காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து அவர்களின் அடையாளங்களைச் சரிபார்க்கவும் உதவும். சீனாவின் தனிப்பட்ட தகவல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், டிஎன்ஏ போன்ற முக்கியமான தகவல்களைச் சேகரிக்க எழுத்துப்பூர்வ அனுமதி, தெளிவான ஒப்புதல் தேவை. இருப்பினும், ஜிலின்ஹாட் அறிவிப்பில் தகவல் எவ்வளவு காலம் தக்கவைக்கப்படும், தனிநபர்களுக்கு என்ன உரிமைகள் இருக்கும் என்பதைக் குறிப்பிடவில்லை.
இந்தத் திட்டம் ஆண்களை மட்டுமே மையமாகக் கொண்டிருப்பது, காவல்துறையினர் ஓய்- குரோமோசோம் சோதனையை நடத்தலாம் என்பதைக் குறிக்கிறது. இதில் தந்தைவழி, விசாரணையில் முழு குடும்பமும் அடங்கும். இது குற்றவியல் விசாரணைகளுக்கு மட்டுமல்ல, குடும்பங்கள், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கண்காணிப்பை விரிவுபடுத்துகிறது. பெரிய அளவிலான ஆண்களின் டிஎன்ஏ தகவல் இராணுவ, உயிரியல் ஆயுதங்கள் வளர்ச்சியின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஒய்-குரோமோசோம் தகவல் நிலையானது, இலக்கு வைக்கப்பட்ட உயிரியல் ஆயுதங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படலாம்.
இந்த டிஎன்ஏ சேகரிப்பு முயற்சி சீனாவின் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பத் தொழில்களை இணைக்கிறது. இப்போது மரபணு வரிசைமுறை மலிவாகவும் வேகமாகவும் மாறிவிட்டதால், உள்ளூர் அரசு பெரிய அளவிலான டிஎன்ஏ தகவல்தளங்களை உருவாக்குவது எளிதாகிவிட்டது. இது சீனாவின் தடயவியல் மரபியல், உயிரி தகவலியல் நிறுவனங்களில் முதலீட்டை அதிகரிக்கக்கூடும். 2006 ஆம் ஆண்டில், ஃபாக்ஸ்கான் ஊழியர்களிடம் இருந்து இரத்த மாதிரிகளை சேகரித்தது சர்ச்சையைத் தூண்டியது. சீனாவில் உயிரியல் தகவல் சேகரிப்பு அதிகரிக்கக்கூடும் என்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஜிலின்ஹாட்டின் திட்டம் ஒரு எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.