இந்தியாவை 3வது இடத்திற்கு தள்ளிய பிரேசில்.. ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு WHO அவசரகால அனுமதி.

By Ezhilarasan BabuFirst Published Mar 13, 2021, 5:24 PM IST
Highlights

கடந்தாண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கட்டுக்குள் வந்த கொரோனா,  மீண்டும் இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் தலைதூக்க தொடங்கியுள்ளது. 

அமெரிக்க மருந்து நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டிற்கு  உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது. வெள்ளிக்கிழமை மாலை இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த ஒப்புதலுக்கு பிறகு இப்போது கோவேக்சின் தடுப்பூசியை போலவே ஏழை எளிய நாடுகளில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. 

கடந்தாண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கட்டுக்குள் வந்த கொரோனா,  மீண்டும் இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் தலைதூக்க தொடங்கியுள்ளது. மொத்த கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையில் பிரேசில் இந்தியாவை முந்தியுள்ளது. பிரேசிலில் நேற்று ஒரே நாளில்  84 ,047 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 13 லட்சத்து 68 ஆயிரத்து 316ஐ எட்டியுள்ளது. ஆனால் இந்தியாவில் 1 கோடியே 13 லட்சத்து 33 ஆயிரத்து 491 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதனால் இந்தியா நோய்த் தொற்றில் உலகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் உலகின் 4.75 லட்சம் பேர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.  ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் இறந்துள்ளனர். 

இதுவரை, 92.62 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா நோய்த்தொற்றுகள் குணப்படுத்தப்பட்டுள்ளன. உலகளவில் இதுவரை 26 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். தற்போது உலகளவில் 20 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் விஞ்ஞானிகளில் தீவிர ஆராய்ச்சிக்கு இடையில் கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கி வருகின்றனர். அந்த வரிசையில், ஜான்சன் அண்ட் ஜான்சன் என்ற தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இது அமெரிக்காவில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கழகம் ஜான்சன் அண்ட் ஜான்சன் மருந்து  நிறுவனத்தின் புதிய கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியது. அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்ட மூன்றாவது கொரோனா தடுப்புச் இதுவாகும். விலை உயர்ந்த பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளுக்கு மாற்றாக இது அமையும் என கருதப்படுகிறது. இந்த மருந்து மற்ற தடுப்பூசிகளைபோல இரண்டு டோஸ் செலுத்தப்பட வேண்டிய அவசியமில்லை. ஒரு டோஸ் செலுத்தினால் போதும். 

அதேபோல சாதாரண குளிர்சாதனப் பெட்டியிலேயே இதை சேமித்து வைக்க முடியும். இதன் செயல்திறன் 66% என வரையறுக்கப்பட்டுள்ளது. தீவிர உடல்நல குறைவில் இருந்து பாதுகாக்கிறது என்பது சோதனையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் உலக சுகாதார  அமைப்பு ஜான்சன் அண்ட் ஜான்சன்  தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதித்து ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி ரத்தம் உறைதல் உள்ளிட்ட கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக டென்மார்க், நோர்வே மற்றும் ஐஸ்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் புகார் எழுந்துள்ளது. ஆனால் அது குறித்து எந்த ஆதாரங்களும் இல்லை என கூறப்படுகிறது. 

இப்போது அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிக்கு 14 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. இது ஒரு அருமையான தடுப்பூசி எனவும், இது உலக அளவில் பயன்படுத்தப்படுகிறது, பக்கவிளைவுகள் பற்றிய புகார்கள் உள்ளன, ஆனால் அதற்கான வலுவான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் கூறியுள்ளார். உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைக்குழு இந்த விஷயத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது, அதற்கிடையில் தடுப்பூசி திட்டத்தை நிறுத்துவது சரியானது அல்ல என அவர் கூறியுள்ளார். 
 

click me!