அமெரிக்க அதிபரை காயப்படுத்திய மோசமான விஷயம்..!! வலிகளையும் வேதனைகளையும் கொட்டித் தீர்த்த ட்ரம்ப்..!!

By Ezhilarasan BabuFirst Published Apr 28, 2020, 3:22 PM IST
Highlights

தயவுசெய்து ஒருநாள் என்னுடைய அறைக்கு வந்து பாருங்கள் நான் வெறும் ஒரு பர்கரை மட்டும் சாப்பிட்டுவிட்டு பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்,  மதிய உணவு சாப்பிட்டு நீண்ட நாட்களாகிவிட்டது,  என அவர் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவில் இதுவரை எந்த அதிபரும் சந்தித்திராத அளவிற்கு நெருக்கடிகளை நான் சந்தித்து வருகிறேன் ,  அவர்கள் ஆற்றிய பணியை காட்டிலும் என் பணி பன்மடங்கு அதிகம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆதங்கம் தெரிவித்துள்ளார் .  அதிபர் டிரம்ப்பின் செயல்பாடுகளை அந்நாட்டு ஊடகங்கள் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார் . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது .  இதுவரையில் 30 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது .  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தையும் கடந்து சென்று கொண்டிருக்கிறது,  ஆனால் இதுவரையில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் கொரோனா வைரஸ் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.  அங்கு மட்டும் கிட்டதட்ட பத்து லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . 

அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கி உள்ளது .  இதுவரை ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 162 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர் .  இன்னும் 8 லட்சத்து 14 ஆயிரத்து 542 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சுமார் 14 ஆயிரத்து 186 பேர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  வல்லரசு என பெயரெடுத்த அமெரிக்கா இந்தப் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் முதல் மாநில  ஆளுநர்கள் வரை அதிபர் டொனால்டு ட்ரம்பை  கடுமையாக சாடி வருகின்றனர் .  ஒருங்கிணைந்து பணியாற்றக்கூடிய தன்மை ட்ரம்பிடம் இல்லை எல்லா முடிவுகளையும் அவர் தன்னிச்சையாக எடுக்கிறார்,   அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிராக ஒருங்கிணைந்த திட்டங்களோ செயல்பாடுகளை இல்லை என அவர்கள் ட்ரம்பை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் .  அதுமட்டுமல்லாது அமெரிக்காவின் பிரபல நாளேடான நியூயார்க் டைம்ஸ் வெளிப்படையாகவே அதிபர்ட்ரம்பை விமர்சித்துள்ளது. 

அது ,  வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் கட்டிடத்தில் ட்ரம்ப் நன்கு தூங்கி ஓய்வெடுத்து வருகிறார்,  விதவிதமான உணவுகளை சமைத்து ருசிக்கிறார் என அவரை கடுமையாக சாடி  கட்டுரை எழுதியுள்ளது .  இந்நிலையில் இது குறித்து தனது  டுவிட்டர் பக்கத்தில் தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ள ட்ரம்ப்,  இதுவரை அமெரிக்க வரலாற்றில்  எந்த அதிபரும் சந்தித்திராத சவால்களை நான் கடந்த மூன்றரை ஆண்டுகளாக சந்தித்து வருகிறேன் ,  அவர்களெல்லாம் பணியாற்றியதை விட நான் நான்கு மடங்கு அதிகம் பணியாற்றி வருகிறேன்.  என்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காககூட  நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியே சென்று பல மாதங்கள் ஆகிவிட்டது .  அதிகாலை முதல் தொடங்கி நள்ளிரவு வரை நான் பணியாற்றுகிறேன் .  குறிப்பாக ராணுவக் கட்டமைப்பு , வியாபார ஒப்பந்தங்கள் , கொரோனாவுக்கு  எதிரான திட்டங்கள் என தொடர்ந்து பணியாற்றிக் கொண்டே இருக்கிறேன் .  என்னைப் பற்றி எதுவுமே தெரியாத ஒரு நாளிதழ் என்னைப் பற்றி அவதூறாக கட்டுரை எழுதி இருக்கிறது அதை நான் முழுவதுமாக படித்துவிட்டேன்.  எனது உழைப்பை பற்றி அறியாத அதன் எடிட்டர் இதை எழுதியிருக்கிறார். 

தயவுசெய்து ஒருநாள் என்னுடைய அறைக்கு வந்து பாருங்கள் நான் வெறும் ஒரு பர்கரை மட்டும் சாப்பிட்டுவிட்டு பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்,  மதிய உணவு சாப்பிட்டு நீண்ட நாட்களாகிவிட்டது,  என அவர் தெரிவித்துள்ளார்.  அன்றாடம் ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்து வந்த நிலையில் செய்தியாளர்கள் தொடர்ந்து அவரையும் அவரது அரசையும் விமர்சித்து வந்ததால்  இனி  தினந்தோறும் செய்தியாளர்களை சந்திக்க போவதில்லை என அவர் தெரிவித்திருந்த நிலையில்  தனது ஆதங்கத்தை டுவிட்டரில் கொட்டி தீர்த்துள்ளார்.   இது குறித்து தெரிவித்துள்ள சுகாதாரத் துறையை சேர்ந்த  அதிகாரி ஒருவர்,  அதிபர் ட்ரம்ப்  எனக்கு அதிகாலை 3 மணி அளவில் தொலைபேசியில் அழைத்து கரோனா வைரஸ் நிலைமைகள் குறித்து கேட்கிறார் ,  அவர் ஓய்வு உறக்கமின்றி பணியாற்றுவதால் தான் நாம் நலமுடன் இருக்கிறோம் ,  அவர் அமெரிக்க மக்களுக்காக தன்னை அற்பணித்துள்ளார் என  கூறியுள்ளார் ,  அமெரிக்க சுகாதாரத் துறையை சேர்ந்த அதிகாரிகள் பலரும் இதே கருத்தை முன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

click me!