நிலைகுலைந்த ஆப்கானிஸ்தான்... நிலநடுக்கத்தில் 800 பேர் பலி... மீட்புப் பணிகள் தீவிரம்

Published : Sep 01, 2025, 02:52 PM IST
Powerful earthquake hits Afghanistan

சுருக்கம்

கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குனார் மாகாணத்தில் மட்டும் 800 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2,500 பேர் காயமடைந்துள்ளதாகவும் தாலிபன் அரசு தெரிவித்துள்ளது.

கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 800-ஐ தாண்டியுள்ளதாக தாலிபன் அரசு தெரிவித்துள்ளது. மலைப்பாங்கான பகுதிகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுக்கள் இரவு பகலாக ஈடுபட்டுள்ளன.

தாலிபன் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் காபூலில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், "குனார் மாகாணத்தில் மட்டும் சுமார் 800 பேர் உயிரிழந்தனர், மேலும் 2,500 பேர் காயமடைந்துள்ளனர். அதிக பாதிப்புக்குள்ளான இந்த மாகாணத்தில் தான் பெரும்பாலான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. அங்கு எண்ணற்ற வீடுகளும் கட்டிடங்களும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன" என்று கூறினார்.

அதேபோல், பக்கத்து மாகாணமான நங்கர்ஹாரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆகவும், காயமடைந்தோர் எண்ணிக்கை 255 ஆகவும் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மீட்புப் பணிகள் தீவிரம்

நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், தாலிபன் அரசும் ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து அதிக பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு மீட்பு குழுக்களை அனுப்பி, மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபை தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில், "கிழக்கு ஆப்கானிஸ்தானைத் தாக்கிய நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளன. இதனால் ஐக்கிய நாடுகள் சபை ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளது. எங்கள் குழுக்கள் அவசர உதவி மற்றும் உயிர் காக்கும் உதவிகளை வழங்குவதற்காக களத்தில் உள்ளன" என்று பதிவிட்டுள்ளது.

அடுத்தடுத்த நில அதிர்வுகள்

இந்த நிலநடுக்கம் நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் நகருக்கு அருகே நள்ளிரவுக்கு சற்று முன் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, இதன் மையம் நகரில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில், வெறும் 8 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது. இத்தகைய ஆழமற்ற நிலநடுக்கங்கள் அதிக சேதத்தை ஏற்படுத்துவது வழக்கம்.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, உள்ளூர் நேரப்படி அதிகாலை 4:00 மணியளவில் 5.2 ரிக்டர் அளவில் ஒரு நிலநடுக்கம் உள்பட பல நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டது.

ஆப்கானிஸ்தானின் நிலநடுக்கங்கள்

ஆப்கானிஸ்தான், குறிப்பாக இந்து குஷ் பகுதியில் உள்ள யூரேசியன் மற்றும் இந்திய டெக்டோனிக் தகடுகளின் சந்திப்புக்கு அருகில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கம். பல்லாண்டுகால மோதல்களால் ஆப்கானிஸ்தான் ஏற்கனவே மனிதாபிமான நெருக்கடியை சந்தித்து வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு நங்கர்ஹார் மாகாணத்தின் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு, ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் பயிர்கள் மற்றும் சொத்துக்கள் அழிந்ததால், சமூகங்கள் மேலும் பலவீனமடைந்துள்ளன.

ஜூன் 2022-ல், பக்டிகா மாகாணத்தில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், மேலும் பத்தாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஆப்கானிஸ்தானுக்கு வரும் வெளிநாட்டு உதவிகள் குறைந்துவிட்டதால், இதுபோன்ற பேரிடர்களுக்கு நாடு போதுமான தயார் நிலையில் இல்லை.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்தியாவின் எதிரி..! இனி ரஷ்யாவின் எதிரி.. இனி எவனும் வாலாட்ட முடியாது.. வேற லெவல்
Putin in India: புதினுக்கு பகவத் கீதையை பரிசாக வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி