Latest Videos

புதுசா கிளம்பி இருக்கும் ஸ்கிராட்ச் கார்டு மோசடி! வெகுளித்தனமா 18 லட்சத்தை பறிகொடுத்த பெண்!

By SG BalanFirst Published May 13, 2024, 10:46 AM IST
Highlights

ஸ்கிராட்ச் கார்டுகளை மோசடி ஆசாமிகளும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். பெங்களூரைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் ஸ்கிராட்ச் கார்டு மோசடியில் சிக்கி ரூ.18 லட்சத்தை இழந்திருக்கிறார்.

பல ஆன்லைன் செயலிகளில் ஸ்கிராட்ச் கார்டுகள் மூலம் அதிர்ஷ்டப் பரிசுகள், ரிவார்டுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்த ஸ்கிராட்ச் கார்டுகளை மோசடி ஆசாமிகளும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

பெங்களூரைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் ஸ்கிராட்ச் கார்டு மோசடியில் சிக்கி ரூ.18 லட்சத்தை இழந்திருக்கிறார். Mesh என்ற ஆன்லைன் ஷாப்பிங் இணையதளத்தில் இருந்து அந்தப் பெண் ஒரு ஸ்கிராட்ச் கார்டைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. அந்தக் கார்டை சுரண்டியபோது அவர் 15.51 லட்சம் ரூபாய் வென்றதாகக் கூறப்பட்டிருக்கிறது.

பரிசு கிடைக்கப்போவதாக நம்பிய அந்தப் பெண், ஸ்கிராட்ச் கார்டில் வழங்கப்பட்டிருந்த நம்பரில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். மறுமுனையில் இருந்த நபர் தனது அடையாளச் சான்றுகளைக் கேட்டார். கர்நாடகாவில் லாட்டரிகள் மற்றும் அதிர்ஷ்டக் குலுக்கல்கள் சட்டவிரோதமாக இருப்பதால், லாட்டரித் தொகையில் 4 சதவீதம் கழிக்கப்படும் என்றும் மீதியைப் பெறுவதற்கு 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மோசடி ஆசாமியின் பேச்சை அப்படியே வெகுளித்தனமாக நம்பிய பெண், பல தவணைகளாக ரூ.18 லட்சத்தை டிரான்ஸ்பர் செய்திருக்கிறார். பணத்தை பெற்ற பிறகு அந்த நம்பரில் தொடர்புகொள்ள முடியாமல் போன பிறகு, தான் ஏமாந்துபோனதை உணர்ந்தார். இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அவர்கள் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிக்கு வலைவீசி இருக்கின்றனர்.

ஸ்கிராட்ச் கார்டு மோசடி என்றால் என்ன?:

போலியான அல்லது தவறாக வழிநடத்தும் ஸ்கிராட்ச் கார்டில் பரிசு வென்றதாக ஒருவரை ஏமாற்றி பணம் பறிப்பதுதான் ஸ்கிராட்ச் கார்டு மோசடி என்று சொல்லப்படுகிறது. இந்த மோசடி பேர்வழிகள் பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்துவார்கள்.

போலி ஸ்கிராட்ச் கார்டுகளில் பணத்தை வென்றதாகக் கூறி, ஒரு கட்டணத்தைச் செலுத்தி பரிசை பெற்றுக்கொள்ளச் சொல்வார்கள். தனிப்பட்ட தகவலை வழங்குமாறும் வற்புறுத்துவார்கள். ஆனால், சொன்னபடி பரிசத்தொகை எதுவும் ஒருபோதும் கிடைகாகது.

இந்த ஸ்கிராட்ச் கார்டை மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்புவார்கள். செயலாக்கக் கட்டணம் என்றும் வரி என்றும் ஒரு தொகையை முன்கூட்டியே செலுத்தினால் தான் பணம் கிடைக்கும் என்று புளுகுவார்கள். அதை நம்பி பணத்தை அனுப்பினால், அந்தத் தொகையை அப்படியே இழக்க நேரிடும்.

மோசடிக்குப் பலிகடா ஆகாமல் இருப்பது எப்படி?:

* மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வேறு ஏதாவது வழியிலோ நீங்கள் எதிர்பார்க்காத ஸ்கிராட்ச் கார்டைப் பெற்றால் அது ஒரு மோசடியாக இருக்கலாம்.

* முறையான லாட்டரிகள், பிரமோஷனல் ஆஃபர்கள் போன்ற ரிவார்டுகளை பெறுவதற்கு எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

* ஸ்கிராட்ச் கார்டின் சட்டபூர்வமான தன்மை குறித்து உங்களுக்குத் தெரியாவிட்டால், நேரடியாக நிறுவனத்தைத் தொடர்புகொண்டு விசாரிக்கவும். சட்டப்பூர்வ நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்கள் மற்றும் பரிசுகளை எவ்வாறு கோருவது என்பது பற்றிய தெளிவான தகவலைக் கொடுப்பார்கள்.

* ஸ்கிராட்ச் கார்டு பரிசைப் பெற உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் அல்லது அடையாளச் சான்று போன்ற தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் வழங்காதீர்கள்.

* தெரியாத்தனமாக ஸ்கிராட்ச் கார்டு மோசடியில் பாதிக்கப்பட்டாலும், உடனடியாக சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளிக்கவும்.

click me!