
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரதமரை சந்தித்தபோது அவருடன் உடனிருந்த ஒரு முக்கியமான நபர் மாணிக்கம்.
யார் இந்த மாணிக்கம்? என்ற கேள்விக்கு விடை ..அவர் எடப்பாடி பழனிச்சாமியின் சகலை. பிரதமரை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தபோது இருவருக்கும் இடையே மாணிக்கம்தான் மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டார்.
முதலமைச்சர் எடப்பாடியுடன், பிரதமரின் வீடு வரை சென்ற தலைமை செயலாளர் கிரிஜா வைத்யநாதன் சம்பிரதாய அறிமுக சந்திப்புகளுக்கு பிறகு பிரதமருக்கும் முதலமைச்சருக்கும் இடையே சந்திப்பு நடைபெற்று முடியும் வரை கிரிஜா வைத்தியநாதன் வெளியேதான் காத்திருந்தார்.
சந்திப்பின் போது முழுக்க முழுக்க உடனிருந்தது பழனிச்சாமியின் சகலை மாணிக்கம்தான்.இத்தனைக்கும் அமைச்சர் தங்கமணி முதல்வர் வருவதற்கு ஒருநாள் முன்னதாகவே டெல்லி வந்துவிட்டாலும் அவரும் உடன்செல்லவில்லை
இதனிடையே பிரதமரும் முதலமைச்சரும், சந்திக்கும் போது,முதலமைச்சரின் சகலை மாணிக்கம் ஏன் உடனிருக்க வேண்டும்,அவருக்கு அங்கு என்ன வேலை? என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மைத்ரேயன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
மாணிக்கம் எதற்காக மொழிபெயர்ப்பாளராக செயல்பட வேண்டும்?இருவருக்குமிடையே மொழிபெயர்ப்பு தேவை என்று கருதினால் தலைமை செயலாளரோ அல்லது வேறு யாரேனும் அதிகாரிகளை வைத்துக் கொண்டிருக்கலாமே? இதன் பின்னணி என்ன என்றும் மைத்ரேயன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்..