
கரூர் பொதுக்கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்க, மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை (Special Investigation Team - SIT) அமைத்துச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உடனடியாக இந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கரூர் காவல்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொறுப்பு மிக்க இந்த விசாரணையைத் தலைமை தாங்கி நடத்தவுள்ள ஐ.ஜி. அஸ்ரா கார்க் குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இவர் தமிழ்நாடு வடக்கு மண்டலத்தின் ஐ.ஜி.யாகப் பொறுப்பு வகிக்கிறார்.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச் சேர்ந்தவர் அஸ்ரா கார்க். தாபர் பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்த இவர், பேராசிரியர்களாகப் பணியாற்றிய பெற்றோரின் வாரிசு. காவல்துறையின் மீது கொண்ட ஈர்ப்பால், 2004-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்றுத் தமிழக கேடரில் பணியில் இணைந்தார்.
தனது பணியைத் திருப்பத்தூரில் உதவி காவல் கண்காணிப்பாளராகத் தொடங்கினார். இவரது நேர்மையான, பாராட்டத்தக்கப் பணி அணுகுமுறை அப்போது பலரைக் கவர்ந்தது.
2008-ல் திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றபோது, அங்குத் தலைவிரித்தாடிய கந்துவட்டிக் கொடுமைகளை ஒடுக்கத் தனிப்படை அமைத்து அதிரடி காட்டினார். இவரைக் கண்டாலே ரவுடிகள் அலறி ஓடும் அளவுக்குத் தனது நேர்மையால் அஸ்ரா கார்க் பாராட்டுகளைப் பெற்றார்.
2010-ல் மதுரை மாவட்ட எஸ்.பி.யாகப் பொறுப்பேற்றபோது, கிரானைட் குவாரி முறைகேடு, நில அபகரிப்புப் புகார்கள் எனப் பல சவால்களைச் சந்தித்துத் துணிச்சலாகச் செயல்பட்டார்.
மதுரையில் நடந்த தேர்தலில் பணப் பட்டுவாடாவைத் தடுத்து நிறுத்திய இவரது நடவடிக்கையை இந்தியத் தேர்தல் ஆணையமே பாராட்டியது.
மதுரை உத்தப்புரத்தில் இரு சமூகங்களுக்கிடையே நீண்டகாலமாக நிலவி வந்த சாதிய மோதலில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாமல் இருந்த நிலையை மாற்ற நடவடிக்கை எடுத்தார். மேலும், தருமபுரி மாவட்டத்தில் இரட்டைக்குவளை முறையை அடியோடு ஒழித்தார்.
ஒரு வழக்கில், தன் மகளைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கணவனைக் கொன்றதற்காகக் கைது செய்யப்பட்ட பெண்ணை, தற்காப்புக்காகச் செய்த கொலை எனக் கண்டறிந்து, ஐ.பி.சி. 100-ன் கீழ் விடுவிக்க உத்தரவிட்டது பரபரப்பாகப் பேசப்பட்டது.
2016-ல் மத்தியப் பணிக்குச் சென்ற இவர், மத்தியப் புலனாய்வுப் பிரிவில் (CBI) பணியாற்றினார். குர்கானில் நடந்த பள்ளிச் சிறுவன் கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட நடத்துனர் அப்பாவி என்றும், உண்மையான குற்றவாளி யார் என்பதையும் தனது திறமையால் வெளிக்கொணர்ந்தார். 2018-ல் டி.ஐ.ஜி.யாகப் பதவி உயர்வு பெற்றார்.
மீண்டும் தமிழகம் திரும்பிய இவர், 2022-ல் ஐ.ஜி.யாகப் பதவி உயர்வு பெற்றார். 2021-ல் மதுரையில் நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கில் துணிந்து செயல்பட்டதற்காகச் சென்னை உயர் நீதிமன்றத்தின் பாராட்டையும் பெற்றவர்.
இவரது கடமை உணர்வையும் அர்ப்பணிப்பையும் பாராட்டி, முதலமைச்சரின் காவல் பதக்கம், சிறப்பான சேவைக்கான காவல் பதக்கம் உள்ளிட்டப் பல்வேறு விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
தற்போது கரூர் வழக்கை விசாரிக்கச் சிறப்புக்குழு தலைவராக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டிருப்பது, இந்த வழக்கில் வெளிப்படையான, அதிரடியான விசாரணை இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.