அமைச்சர் நேருவின் சகோதரர் கொலை வழக்கில் குற்றவாளியை நெருங்கி விட்டோம்...! காவல்துறை பரபரப்பு தகவல்

By Ajmal KhanFirst Published Apr 22, 2022, 2:39 PM IST
Highlights

முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த 10 ஆண்டுகளாக எந்த வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் தற்போது கொலை தொடர்பாக முக்கிய துப்பு கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம் எனவும் கூறியுள்ளனர்.

அமைச்சர் நேருவின் சகோதரர் கொலை வழக்கு

அமைச்சர் நேருவின் சகோதரர் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி தனது வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றவர் வீடு திரும்பவில்லை, இதனையடுத்து மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில், காவிரி ஆற்றின் கரையில் இருந்து அவரது சடலம் கண்டு எடுக்கபட்டது. இதுகுறித்து, தில்லை நகர் போலீசார் முதலில் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. கொடூரமான முறையில் ராமஜெயம் கொலை செய்யப்பட்டிருந்தார். . இவரது கொலை வழக்கு தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார் பல  ஆண்டுகளாகியும் கொலையாளியின் நிழலைக்கூட நெருங்க முடியவில்லை இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் ராமானுஜத்தின் மனைவி லதா கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கில் இதுவரை ஆயிரத்திற்கும்  மேற்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.   ராமஜெயத்தைக் கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 294 வாகனங்கள் ஆய்வு,  2ஆயிரத்து 910 மொபைல் போன் எண்கள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றைப் பயன்படுத்தியவர்கள் விசாரிக்கப்பட்டிருந்தனர். இருந்த போதும்  கொலையாளிகள் சிக்கவில்லை.

கொலையாளி யார் ?

கொலையாளிகள் பிடிபடாத நிலையில், ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, விசாரணை அறிக்கையை 3 மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. சிபிஐ விசாரணையிலும்  எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாததால்,  வழக்கை மாநில காவல்துறையே விசாரிக்க வேண்டும் என  ராமஜெயத்தின் சகோதரர் என். ரவிச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி. பாரதிதாசன், சிபிசிஐடி, சிபிஐ அமைப்புகள், 10 ஆண்டுகள் விசாரணை நடத்தியும் கொலைக்கான நோக்கம் கண்டறியப்படவில்லை எனக்கூறி, வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி எஸ்.பி.-யாக இருந்த ஜெயக்குமார் தலைமையில்,  அரியலூர் டி.எஸ்.பி. மதன், சென்னை சிபிஐ-யை சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்ட நீதிபதி,  15 நாட்களுக்கு ஒரு முறை விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், விசாரணையை சிபிசிஐடி டிஜிபி  ஷகீல் அக்தர் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். விசாரணைக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

கொலையாளியை நெருங்கி விடுவோம்

இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி சிறப்பு புலனாய்வு குழு விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்தார். பின்னர் அவர், சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையில் புதிய துப்பு துலங்கியுள்ளது எனவும், சம்பவம் நடந்த காலத்தில் பணியில் இருந்த ஆறு போலீசார் உள்பட 198 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளதாகவும், உயர் அதிகாரிகளையும்  விசாரிக்க உள்ளதாகவும்  தெரிவித்தார்.  சிறையில் அடைக்கப்பட்டுள்ள பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது எனவும், 43 அதிகாரிகள் புலன் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும்,  விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம்  எனவும், கொலையாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் ரொக்க பரிசு அறிவிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ரகசிய அறிக்கை குறித்து திருப்தி தெரிவித்த  நீதிபதி, விசாரணையை ஜூன் 10ம் தேதி தள்ளிவைத்தார்.


 

click me!