
ஈரோடு
பிப்ரவரி 3-ஆம் தேதிக்குள் வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் மிகப் பெரிய போராட்டத்தை மீண்டும் நடத்துவோம் என்று ஈரோட்டில், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டம்
ஆண்டாள் பற்றிய கவிஞர் வைரமுத்துவின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்து அமைப்புகள் சார்பில் ஈரோடு மாவட்டம், காளை மாட்டு சிலை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் சடகோப ராமானுஜ சுவாமி தலைமை வகித்தார். பேரூர் ஆதினம் சாந்தலிங்கம் முன்னிலை வகித்தார்.
இதில் ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ண பிரியர், சுதர்சன ராமானுஜ தாசன், கோவர்தன், பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் செந்தில் பாலசுப்பிரமணியன், மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
பேட்டி
திருவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், “கவிஞர் வைரமுத்து ஆண்டாளை பற்றி தவறாக பேசியுள்ளார். அதற்காக அவர் திருவில்லிபுத்தூர் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். சமூக வலைதளம் மூலம் மன்னிப்பு கேட்டால் நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம்.
ஆண்டாளிடம் மன்னிப்பு
நாங்கள் எங்களிடம் மன்னிப்பு கேட்க செல்லவில்லை. கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும்கூட பரவாயில்லை அவர் ஆண்டாளை உன்மையாகவே தாயாக நினைத்தால் திருவில்லிபுத்தூர் வந்து நான் பேசியது தவறு என்று கூறி மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் வந்து கேட்பார் என்று நாங்கள் நம்புகிறோம்.
நாங்கள் யார் சொல்லியும் எங்களுடைய உண்ணாவிரத போராட்டத்தை கைவிடவில்லை. அடியார்கள், அரசாங்க அதிகாரிகளின், திருவில்லிபுத்தூர் கோவில் அர்ச்சகர் வேண்டுகோளுக்கு இணங்க எங்களுடைய உண்ணாவிரத போராட்டதை கைவிட்டோம்.
வைரமுத்துவுக்கு கெடு
அரசாங்க அதிகாரிகளிடம் எங்களுடைய கோரிக்கையை வைத்தோம். அவர்கள் வருகிற பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதிக்குள் வைரமுத்து மன்னிப்பு கேட்பதற்கு ஏற்பாடு செய்கிறோம் என்று கூறினர். நாங்கள் அதற்கு சரி என்று சொன்னோம்.
பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதிக்குள் அவர் மன்னிப்பு கேட்வில்லை என்றால் நாங்கள் அனைவரும் திருவில்லிபுத்தூரில் நடுசாலையில் அமர்ந்து மிகப் பெரிய போராட்டத்தை மீண்டும் நடத்துவோம் என்றும் கூறினோம். அதற்கு அவர்களும் ஒத்துக்கொண்டனர்.
போராட்டத்தை கைவிட நிர்பந்தம்
அதற்காகத்தான் நாங்கள் எங்களுடைய உண்ணாவிரத போராட்டதை கைவிட்டோமோ தவிர எந்த அரசியல்வாதிக்காவும் இல்லை. எங்களுடைய போராட்டத்தை கைவிடக்கோரி யாரும் நிர்ப்பந்தப்படுத்தவில்லை” என்று அவர் தெரிவித்தார்.