ஏலச்சீட்டு நடத்துவதாக கூறி ரூ.52 இலட்சத்தை மோசடி செய்த இருவர் கைது...போலீஸ் உடனடி நடவடிக்கை...

First Published Apr 17, 2018, 8:04 AM IST
Highlights
Two arrested for fraudulent Rs.52 lakhs


சிவகங்கை

ஏலச்சீட்டு நடத்துவதாக கூறி ரூ.52 இலட்சத்து 50 ஆயிரத்தை மோசடி செய்த இருவரை காவலாளர்கள் புகாரின்பேரில் உடனே கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தென்றல் நகரைச் சேர்ந்தவர் சாரதா. இவரிடம், இளையான்குடி அருகே உள்ள அண்டக்குடி, ஏ.புதூரைச் சேர்ந்த தனசெல்வி (39), வாணி கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி (40) ஆகிய இருவர் சேர்ந்து ஏலச்சீட்டு நடத்துவதாக கூறியுள்ளனர். 

பின்னர், இந்த ஏலச்சீட்டிற்கு ஆள்பிடித்து கொடுத்தால் அதற்கு தனியாக கமிஷன் பணம் தருவதாகவும் கூறி ஆசைவார்த்தை காட்டியுள்ளனர். 

இதனை நம்பி சாரதா தனக்கு தெரிந்த 12 பேரிடம் இருந்து கடந்த ஒரு வருடத்தில் ரூ.52 இலட்சத்து 50 ஆயிரம் வரை வசூலித்து தனசெல்வி, ஆரோக்கியசாமியிடம் சாரதா கொடுத்துள்ளார்.

ஆனால், பணத்தை பெற்றுக் கொண்ட தனசெல்வியும், ஆரோக்கியசாமியும் ஏற்கனவே கூறியபடி சாரதாவிற்கு கமிஷன் தொகையை கொடுக்கவில்லை. கமிஷன் தொகை குறித்து கேட்டபோது இருவரும் பதில் ஏதும் கூறாமல் இருந்துவந்துள்ளனர். இதனால் வசூலித்து கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு சாரதா கேட்டுள்ளார். 

அப்போது, அவர்கள் பணம் தரமறுத்ததுடன் சாரதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மோசடி செய்யப்பட்டதை அறிந்த சாரதா இது குறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரனிடம் புகார் கொடுத்தார்.

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரனிடம் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுந்தர மாணிக்கம் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டார். 

அதன் முடிவில் ஏலச்சீட்டு நடத்துவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட தனசெல்வியையும், ஆரோக்கியசாமியையும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.

click me!