
தமிழக சட்டப்பேரவை தேர்தல் களைகட்டியுள்ளது. திமுக, அதிமுக என இரண்டு பெரிய திராவிட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டன. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்யும் அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். தவெக 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் நிலையில், அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை விஜய் அறிவித்தார்.
தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பொதுச் செயலாளர் என். ஆனந்த் தி.நகர் தொகுதியிலும், ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியிலும், செங்கோட்டையன் கோபிச்ச்செட்டிபாளையம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், விஜய் தனது நீண்டகால ஓட்டுநர் மற்றும் உதவியாளரான ராஜேந்திரனின் மகன் சபரிநாதனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.
அதாவது ராஜேந்திரனின் மகனான சபரிநாதன் வரும் 2026 தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ராஜேந்திரன் நடிகர் விஜய்யின் கார் ஓட்டுநரும், உதவியாளரும் ஆவார். விஜய்யின் முதல் படமான நாளைய தீர்ப்பு முதல் ராஜேந்திரன் விஜய்க்கு கார் ஓட்டுநராக உள்ளார். சுமார் 30 ஆண்டுகளாக விஜய்யின் வலது கரமாக, அவருடன் நிழல் போல பயணித்து வருகிறார்.
யார் இந்த சபரிநாதன்?
ராஜேந்திரனின் விசுவாசத்தையும், உழைப்பையும் கெளவரப்படுத்தும் வகையில் அவரது மகன் சபரிநாதனுக்கு சீட் வழங்கி மரியாதை செய்துள்ளார் விஜய். சப்ரிநாதனை பொறுத்தவரை நீண்ட காலமாகவே விஜய் மக்கள் இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். கடந்த ஆண்டு அவர் விருகம்பாக்கம் தொகுதி மாவட்டச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
மேடையில் நெகிழ்ச்சி
இன்றைய வேட்பாளர்கள் அறிவிப்பின் போது, தனது தந்தையுடன் மேடைக்கு வந்த சபரிநாதன், விஜய்யின் காலில் விழுந்து ஆசி பெற்றார். அப்போது அவரும், அவரது தந்தை ராஜேந்திரனும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டனர். இதைக் கண்டு நெகிழ்ந்த விஜய், சபரிநாதனை அரவணைத்து அவரது கண்ணீரைத் துடைத்துத் தேற்றினார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தனது வெற்றியில் ஆரம்பம் முதல் பங்கெடுத்த ஒரு சாதாரணத் தொழிலாளியின் மகனை, சட்டமன்ற வேட்பாளராக அறிவித்ததற்கு விஜய்க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.