சேலம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து சேலத்தில் பா.ம.க.வினர் முழு அடைப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம், இரயில் மறியலில் போன்றவை நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, போராட்டம் நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்றது.
அதன்படி, சேலம் மாவட்டம், மேட்டூரில் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. கிராமத்து பகுதிகளில் இயக்கப்படும் அரசு நகர பேருந்துகள் மாலை 6 மணியுடன் நிறுத்தப்பட்டன. முழு அடைப்பு காரணமாக மேட்டூர் பேருந்து நிலையம், சதுரங்காடி, உழவர்சந்தை, உள்பட முக்கிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
துணை கண்காணிப்பாளர் சௌந்தரராஜன் தலைமையில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்தையொட்டி மேட்டூர் பூங்கா அருகே பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு விவசாயிகள் கூட்டு இயக்க தலைவர் தெய்வசிகாமணி, பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் கண்ணையன், வன்னியர் சங்க மாநில துணை தலைவர் துரைராஜ், சேலம் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. மாவட்ட செயலாளர் ராஜசேகரன் வரவேற்றுப் பேசினார். நகர செயலாளர்கள் சுகுமார், சந்திரசேகரன், நகர தலைவர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோன்று, ஓமலூர், அயோத்தியாபட்டணம், வாழப்பாடி, ஜலகண்டாபுரம் பேருந்து நிலையம், கடைவீதி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள், சூரப்பள்ளி, ஆவடத்துார், கோட்டைமேடு, இளம்பிள்ளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போராட்டம் மற்றும் கடையடுப்பு நடைப்பெற்றது.
இதேபோல, மகுடஞ்சாவடி, காக்காபாளையம், வேம்படிதாளம், பெருமாகவுண்டம்பட்டி, சின்னப்பம்பட்டி, எட்டிகுட்டைமேடு, ஆத்தூர், நரசிங்கபுரம் பகுதிகளில் உள்ள முக்கிய கடைகள், மளிகை கடைகள், உணவகங்கள், சுவீட் ஸ்டால்கள், துணிக் கடைகள், நகை கடைகள், எலக்ட்ரிக்கல் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.
மேலும், ஆத்தூர் இரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடந்தது. சேலம் கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் ஆத்தூர் இரயில் நிலையத்தில் உழவர் பேரியக்க மாநில துணைத்தலைவர் பாலசுந்தரம் தலைமையில் மாநில பா.ம.க. துணை செயலாளர் குணசேகரன், மாவட்ட செயலாளர் நடராஜன், உட்பட 200-க்கும் மேற்பட்டோர் சேலத்தில் இருந்து ஆத்தூர் வழியாக விருத்தாசலம் சென்ற இரயிலை மறியல் செய்ய ஊர்வலமாக வந்தனர்.
தண்டவாளத்தில் இறங்கி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் கூடுதல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், துணை கண்காணிப்பாளர்கள் பொன்.கார்த்திக்குமார், ராஜூ, ஆய்வாளர் கேசவன் ஆகியோர் தலைமையில் இருந்த காவலாளர்கள் விரைந்து சென்று இரயிலை மறிக்க முயன்ற 214 பேரை கைது செய்து பஸ்களில் ஏற்றி ஒரு திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.