குடிநீர் கேட்டு கிராம மக்கள் ஒன்றிய அலுவலகம் முற்றுகை போராட்டம்...

First Published Apr 5, 2018, 11:17 AM IST
Highlights
The village office of the villagers asked for drinking water ...


திண்டுக்கல்

குடிநீர் கேட்டு திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஒன்றியம் எமக்கலாபுரம் ஊராட்சி கைலாசம்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 

இவர்களுக்கு அந்தப் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலைத்தொட்டியில் ஏற்றப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடும் வறட்சி காரணமாக தற்போது ஆழ்துளை கிணற்றில் குறைந்தளவே தண்ணீர் இருப்பதால் அப்பகுதி மக்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது அதுவும் முறையாக வருவதில்லை.

இதனையொட்டி தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒரு குடம் தண்ணீர் ரூ.5 விலைக்கு வாங்குகின்றனர். தங்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று சாணார்பட்டி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து சாணார்பட்டி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபா ராஜமாணிக்கம் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது ஏற்கனவே உள்ள ஆழ்துளை கிணற்றை ஆழப்படுத்தவும், புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

click me!