
பணியிட மாற்றம் செய்ய லஞ்சம் கேட்டு மிரட்டியதாக மீனாட்சி கூறிய தன் மீதான குற்றசாட்டுக்கு விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என குற்றம்சாட்டப்பட்ட சரோஜா தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரியாக இருப்பவர் மீனாட்சி. இவருக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.
தருமபுரியில் இருந்து சென்னைக்கு பணியிட மாற்றம் செய்ய குழந்தைகள் நல பாதுகாப்புத்துறை அதிகாரி மீனாட்சியை சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தனது வீட்டிற்கு நேரடியாக வரவழைத்து ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டியதாக கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
மேலும், பணியிட மாற்றத்திற்காக தன் தந்தையிடம் ரூ. 10 லட்சம் ரூபாய் வரை அமைச்சர் சரோஜா லஞ்சம் வாங்கியுள்ளதாகவும், மேலும் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் மீனாட்சி அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
எக்காரணத்தை கொண்டும் வேலையை ராஜினாமா செய்ய மாட்டேன் எனவும், எனது வாழ்க்கைக்கும் வேலைக்கும் பாதுக்காப்பு வேண்டும் எனவும் குறிபிட்டுள்ளார்.
இந்நிலையில், அமைச்சர் சரோஜா சென்னை ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்த வந்திருந்தார்.
உள்ளே செல்வத்திற்கு முன் செய்தியாளர்கள் மீனாட்சியின் குற்றசாட்டு குறித்து கேள்வி எழுப்பினர்.
அப்போது, தன் மீதான குற்றசாட்டுக்கு விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என தெரிவித்துவிட்டு சைலண்டாக உள்ளே சென்றார்.