தமிழகத்தில் இவ்வளவு காட்டு யானைகளா.? கணக்கெடுப்பில் வனத்துறை குட் நியூஸ்

Published : Oct 07, 2025, 02:22 PM IST
wild elephants

சுருக்கம்

2025 ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது, அதன்படி தமிழ்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை 3,063-ல் இருந்து 3,170 ஆக அதிகரித்துள்ளது. 

Elephant population in Tamil Nadu : இந்தியாவில் யானைகள் பாதுகாப்பில் தமிழ்நாடு நீண்ட காலமாகவே முன்னணி வகிக்கிறது. யானை காப்பகங்கள் மற்றும் சரணாலயங்களை உருவாக்குவது முதல், முதுமலை மற்றும் ஆனைமலையில் உள்ள பாகன் கிராமங்கள் மூலம் பாகன் குடும்பங்களை மறுவாழ்வு அளிப்பது வரை, பாதுகாப்பு மற்றும் சகவாழ்வை சமநிலைப்படுத்தும் முன்னோடி முயற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்த நிலையில் மூன்றாவது ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு (2025) அறிக்கையின் வெளியிடப்படுள்ளது. அதில், தமிழ்நாட்டின் யானைகள் கணக்கெடுப்பு ஆரோக்கியம் மற்றும் நிலைத்தன்மையில் அளவிடக்கூடிய முன்னேற்றத்தை வெளிப்படுத்துகிறது.

தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை

வனவிலங்கு வாரக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இன்று (07.10.2025) தலைமைச் செயலகத்தில் வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் யாணை கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாட்டில் கணக்கிடப்பட்ட 3,170 காட்டு யானைகள் உள்ளன என்றும், இது முந்தைய கணக்கெடுப்பில் இருந்த 3,063 என்ற எண்ணிக்கையை விட 107 யானைகள் அதிகம் என்றும் அறிவித்தார். "வளம் குன்றிய காடுகளை மீட்டெடுப்பதில் இருந்து, யானைகள் வழித்தடங்களை வலுப்படுத்துவது மற்றும் மனித-யானை மோதலைத் தடுக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது வரை. எங்கள் அணுகுமுறை முழுமையானதாகவும் மக்களை மையமாகக் கொண்டதாகவும் உள்ளது." என்றும் அவர் தெரிவித்தார்.

யானைகள் நமது காடுகளிலும், நமது கலாச்சார அடையாளத்திலும் ஒரு அங்கமாக உள்ளன. அவற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது. நமது கொள்கைகள் பலனளிப்பதற்கான ஒரு வலுவான அறிகுறியாகும்" என்று அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுப்ரியா சாகு,கூறினார். இந்த ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு மதிப்பீடு, யானைகளின் வாழ்விடங்களைப் பகிர்ந்து கொள்ளும் நிலப்பரப்புகளில் நிலையான தரவை உறுதி செய்வதற்காக, கர்நாடகாவுடன் இணைந்து மே 23 முதல் 25. 2025 வரை நடத்தப்பட்டது.

தமிழகத்தில் அதிகரித்துள்ள யானைகள்

தமிழ்நாட்டில், இந்த கணக்கெடுப்பு புலிகள் காப்பகங்கள். வனவிலங்கு சரணாலயங்கள், பிராந்திய வனப் பிரிவுகள் மற்றும் ஒரு தேசியப் பூங்கா உட்பட 26 வனப் பிரிவுகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 2,043 வனத்துறை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இதில் பங்கேற்றனர். அவர்கள். 'பிளாக் கவுண்ட்' (Block Count), 'லைன்-டிரான்செக்ட் (சாணம் கணக்கெடுப்பு)' (Line-transect dung count), மற்றும் 'நீர்நிலை கணக்கெடுப்பு' (Waterhole count) ஆகிய மூன்று நிலையான வழிமுறைகளைப் பயன்படுத்தினர்.

யானைகளின் விகிதம்

இந்த ஆய்வின் பகுப்பாய்வின்படி, 3,261 சதுர கிலோமீட்டரை உள்ளடக்கிய 681 மாதிரிப் பிரிவுகளின் அடிப்படையில், யானைகளின் அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 0.35 என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த யானைகள் கணக்கெடுப்பில் 44 சதவீதம் வளர்ச்சியடைந்த யானைகள் ஆகும். இதில், ஆண்-பெண் விகிதம் 1:1.77 ஆகவும். வளர்ச்சியடைந்த பெண் யானை-கன்றுக்குட்டி விகிதம் 1:0.50 ஆகவும் உள்ளது. ஒரு யானை கூட்டமானது 3 முதல் 16 யானைகள் வரை இருந்தது. முதுமலை புலிகள் காப்பகத்தில் மிக அதிக அடர்த்தியாக ஒரு சதுர கிலோமீட்டருக்கு 1.35 எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது (மதிப்பிடப்பட்ட யானைகளின் எண்ணிக்கை 325), இதற்கு அடுத்தபடியாக கூடலூர் வனப் பிரிவு மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகம் ஆகியவை உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அட! 2026 தேர்தலுக்கு இப்போதே ரெடி! நாம் தமிழர் கட்சியின் 100 வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சீமான்!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!