நாளை நடைபெற இருந்த உடற்பயிற்சி ஆசிரியர் தேர்வைக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூன் 26-ம் தேதி உடற்கல்வி ஓவியம், இசை, தையல் பயிற்சி போன்ற சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்துக்கான அறிவிக்கை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் சார்பில் வெளியிடப்பட்டது.
இதையடுத்து ராஜேஷ்கண்ணா மற்றும் குமார் ஆகியோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கையில், உடற்கல்வி ஆசிரியர் பணிக்கான தகுதியில் மத்திய அரசின் என்.சி.டி.இ 2-வது அட்டவணை விதிமுறைப்படி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு தகுதி நிர்ணயம் அறிவிக்கப்படவில்லை மாறாக பொதுவான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பொதுவான தகுதியை ரத்து செய்துவிட்டு மத்திய அரசின் என்.சி.டி.இ விதி 2001-ன் படி, ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 நிலைகளில் உடற்கல்வி ஆசிரியர்களை தேர்வு செய்து நியமிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்த வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாளை நடைபெறவுள்ள உடற்கல்வி ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இடைக்கால தடை விதித்து வழக்கை ஒத்திவைத்தார்.
இதையடுத்து ஆசிரியர் தேர்வு வாரியம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.
எனவே ஏற்கனவே ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட 11 மாவட்டங்களில் 106 மையங்களில் 37, 951 தேர்வர்களுக்கு தேர்வு எழுத அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக வாரியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.