
பள்ளிக்கு தாமதமாக சென்ற மாணவருக்கு உடற்கல்வி ஆசிரியர் வாத்து நடை தண்டனை வழங்கிய போது, அந்த மாணவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சென்னை பெரம்பூரில் உள்ள திரு.வி.க. பகுதியை சேர்ந்த முரளி என்பவரின் மகன் நரேந்திரன். இவர் பிருந்தா திரையரங்கம் அருகே இருக்கும் டான் பாஸ்கோ பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற நரேந்திரன், திடீரென்று இறந்துவிட்டதாக அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.
விஷயத்தை அறிந்த மாணவரின் பெற்றோர் பள்ளிக்கு விரைந்தனர், அங்கு சென்று விசாரிக்கையில் நரேந்திரன் இயற்கை மரணமடைந்ததாகக் கூறி கையெழுத்து வாங்கிவிட்டு உடலை ஒப்படைத்துள்ளனர். ஆனால், நரேந்திரனுடன் படிக்கும் மாணவர்கள் சொன்ன தகவல் நரேந்திரனின் பெற்றோர் மற்றும் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வழக்கம் போல பள்ளிக்குக் கிளம்பிய நரேந்திரன் 10 தாமதமாக பள்ளிக்குள் நுழைந்துள்ளார். இதனால், பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங் நரேந்திரன் உட்பட பள்ளிக்குத் தாமதமாக வந்த மாணவர்களை பள்ளியை மூன்று முறை ‘டக்வாக்’ எனும் வாத்துநடை தண்டனை வழங்கியுள்ளனர். இதில் நரேந்திரன் உட்பட 3 மாணவர்கள் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் இருவர் முதலுதவியின் மூலம் காப்பாற்றப்பட்டாலும், நரேந்திரன் பரிதாபமாக பலி ஆனதாக சொல்கிறார்கள்.
இதையறிந்த, பெற்றோர் மாணவர் நரேந்திரனுக்கு கடுமையான தண்டனை வழங்கிய உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங் மற்றும் மாணவரின் மரணத்தை மறைத்த பள்ளி முதல்வர் உள்ளிட்டோரைக் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங் கைது செய்ததாக காவல்துறை தெரிவிக்கின்றன.