புதுச்சேரியில் இன்று பட்டபகலில் ரடியை வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படுகொலை செய்து விட்டு காரில் தப்பியோடிய கொலையாளிகளை, பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சியப்பன். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. ஓசூரைச் சேர்ந்த சுதாகர் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொளஞ்சியப்பன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
ஜாமினில் வெளிவந்த அவர், புதுச்சேரியில் தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொளஞ்சியப்பன், புதுச்சேரி அண்ணாசாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். போத்தீஸ் துணிக்கடை அருகே கொளஞ்சியப்பன் சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனம் மீது, கார் ஒன்று மோதியுள்ளது.
இதில் நிலைதடுமாறி விழுந்த கொளஞ்சியப்பனை, காரில் இருந்து இறங்கிய கும்பல் ஒன்று, அரிவாலால் பயங்கரமாக தாக்கியது. அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடடிய கொளஞ்சியப்பனை சராமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த கொளஞ்சியப்பன், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொளஞ்சியப்பனை தாக்கிவிட்டு தப்பியோடிய கும்பல், சாலையில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களை இடித்து தள்ளிவிட்டு தப்பியது. இது குறித்து, பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், தப்பியோடிய கும்பலை விடாமல் துரத்தி வந்தனர். இந்த நிலையில், கடலூர் மாவட்டம், புதுநகர் போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, ஆல்பேட்டை சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு வந்த கொலையாளிகளின் கார் நிறுத்தாமல் தடுப்புகளை மோதிவிட்டு தப்பினர்.
ஆனாலும், புதுச்சேரி, கடலூர் போலீசார் உழவர் சந்தை அருகே கொலையாளிகளின் காரை மடக்கி பிடித்தனர். இதையடுத்து அங்கு வந்த பொதுமக்கள் காரில் இருந்தவர்களைப் பிடித்து சரமாரியாக தாக்கி அடித்து உதைத்தனர். பொதுமக்களிடம் இருந்து அவர்களை மீட்ட போலீசார் புதுநகர் காவல் நிலையத்தில் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஓசூரில் கொலை செய்யப்பட்ட சுதாகரின் கொலைக்கு பழிக்குப் பழி வாங்கவே இந்த கொலை நடந்ததாகவு தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.