திண்டுக்கல்
சொத்து வரி பத்து மடங்கு உயர்த்தப்பட்டதற்கும் மற்றும் நகராட்சியின் மற்ற வரி விதிப்புகளுக்கும் கண்டனம் தெரிவித்து திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சி சார்பில் சொத்து வரி பத்து மடங்கு உயர்த்தப்பட்டது. அதனுடன் உயர்த்தப்பட்ட வரியை கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், பிறப்பு, இறப்பு சான்றிதழுக்கு 100 ரூபாய் கட்டணம், குப்பைக்கு வரி என பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சாலைகள், சாக்கடைகள் உள்ளிட்டவை பராமரிப்பின்றி உள்ளன. எனவே, இதைக் கண்டித்து பழனி பை-பாஸ் குளத்து ரௌண்டானா அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலர் சந்தானம், முன்னாள் நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம், நகரச் செயலர் கந்தசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் குருசாமி உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
இதில் நகராட்சி வரி விதிப்பு உயர்வைக் கண்டித்து முழக்கங்களும் எழுப்பப்பட்டன.
இதில், மாவட்ட, நகர, வார்டு நிர்வாகிகள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.