
மொத்தம் 57 ஆயிரத்து 746 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. சுமார் 1.13 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
வாக்கு எண்ணும் மையத்துக்கு உள்ளேயும், வெளியேயும் சிசிடிவி கேமிராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணிப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்தாலும் ஒரு சில இடங்களில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளார். அதில், ‘ நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று 19.022022 மாலை 6.00 மணியுடன், அமைதியாக நடந்து முடிந்தது. பல இடங்களில் சிறு பிரச்சினைகள் எழுந்தபோது அந்த இடங்களுக்கு விரைந்து சென்று உடனடி நடவடிக்கை எடுத்து பிரச்சினைகளுக்கு தீர்வு கண்ட மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், சரக காவல்துறை துணைத் தலைவர்கள், மண்டல காவல்துறை தலைவர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் பணி இன்னும் முடியவில்லை.
சில பிரச்சினைகள் இனிமேல் தோன்ற வாய்ப்பு உண்டு. எனவே, ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். பிரச்சினையான பகுதிகள் கண்காணிக்கப்படுதல் வேண்டும். மின்னணு வாக்குப்பதிவுப் பெட்டிகள் (EVM) வாக்கு எண்ணுமிடத்தில் ஒப்படைத்த பின்னர் தலைமை அலுவலகங்களுக்கு அறிக்கை அனுப்புதல்வேண்டும். தீவர கண்காணிப்புப் பணிகள் மாநகரங்களிலும், மாவட்டங்களிலும் அடுத்த மூன்று நாள்களுக்கும் தொடரும்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.