நெடுஞ்சாலைத் துறையில் நடந்துள்ள முறைகேடுகளை விரைவில் வெளியிடுவேன் - டி.டி.வி.தினகரன் முதல்வருக்கு எச்சரிக்கை...

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 28, 2018, 12:38 PM IST
Highlights

நெடுஞ்சாலைத் துறையில் நடந்துள்ள முறைகேடுகளுக்கான பட்டியலை தயார் செய்து வருகிறோம் என்றும் விரைவில் அதனை வெளியிடுவோம் என்றும் அ.ம.மு.க.-வின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

திண்டுக்கல்

நெடுஞ்சாலைத் துறையில் நடந்துள்ள முறைகேடுகளுக்கான பட்டியலை தயார் செய்து வருகிறோம் என்றும் விரைவில் அதனை வெளியிடுவோம் என்றும் அ.ம.மு.க.-வின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக் கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் நேற்று முன்தினம் நடைப்பெற்றது.  இந்தக் கூட்டத்திற்கு அ.ம.மு.க.-வின் அமைப்புச் செயலாளர் குமாரசாமி தலைமைத் தாங்கினார். 

மேற்கு மாவட்டச் செயலாளர் நல்லசாமி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு  திண்டுக்கல் 'வெள்ளி வீரவாள்' மற்றும் வெண்கலத்தால் செய்யப்பட்ட 'புலிக்குட்டி சிலை' பரிசாக வழங்கப்பட்டது. 

இக்கூட்டத்தில் டி.டி.வி.தினகரன், "என்னை 'குட்டி எதிரி' என்று முதலமைச்சர் எடப்படி பழனிசாமி கூறுகிறார். குட்டி எதிரி என்றால் ஏன் எங்கள் கட்சிக் கூட்டத்திற்கு அனுமதி தர மறுக்கிறீர்கள்? என்று நறுக்குன்னு கேட்டார் தினகரன். 

மேலும், "நெடுஞ்சாலைத்துறையில் நடந்துள்ள முறைகேடுகளுக்கான பட்டியலை தயார் செய்து வருகிறோம். விரைவில் அதனை வெளியிடுவோம்" என்று முதல்வரை எச்சரித்தார்.

அதுமட்டுமின்றி, "இந்த ஆட்சி அம்மாவின் பேரில் நடக்கும் போலி ஆட்சி. இதனை விரைவில் தூக்கி எறிவோம். மீண்டும் அம்மாவின் ஆட்சி வர வேண்டும், தமிழர்கள் தலை நிமிரவேண்டும். இதற்கான நான் ஊர் ஊராக சென்று பேசிவருகிறேன்" என்றுக் கூறினார்.

"திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத் தேர்தல்களில் கருத்துத் திணிப்புகளைக் கடந்து அ.ம.மு.க. வெற்றிப் பெறும்" என்று அடித்துக் கூறினார் டி.டி.வி. தினகரன்.

click me!