
கன்னியாகுமரி
மார்த்தாண்டத்தில் இருந்து கேரளாவுக்கு 12 மூட்டை தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை டெம்போவில் கடத்திய இருவரை காவலாளார்கள் கைது செய்தனர். டெம்போவையும் பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே படந்தாலுமூடு சோதனைச்சாவடியில் களியக்காவிளை காவலாளர்களும், மாவட்ட உணவு பாதுகாப்பு தடுப்பு பிரிவு காவலாளார்களும் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக அளவுக்கு அதிகமாக பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த டெம்போவை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் தேங்காய் மற்றும் கருப்பட்டி மூடைகள் இருந்தது தெரியவந்தது.
எனினும், சந்தேகமடைந்த காவலாளர்கள் டெம்போவில் மேற்பரப்பில் இருந்த மூடைகளை அப்புறப்படுத்தியபோது, அடியில் இருந்த மூடைகளில் தடைச் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
அதன்பின்னர், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 12 மூட்டை தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை டெம்போவுடன் பறிமுதல் செய்தனர். இதையடுத்து காவலாளர்கள் டெம்போவை ஓட்டிவந்த கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த சிபு (36) மற்றும் பைஜூ (39) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில் மார்த்தாண்டம் பகுதியில் இருந்து புகையிலை பொருட்களை வாங்கி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து காவலாளர்கள் மார்த்தாண்டம் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை யார்? யார்? விற்கிறார்கள் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.