
பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்தவர் தொழிலதிபர் சேகர் ரெட்டி. கடந்த ஆண்டு இவரது வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும் அவரது கூட்டாளிகள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டன. இதில், அவர்களிடமிருந்து ஏரளாமான புதிய மற்றும் பழைய நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.
அதாவது 170 கோடி ரூபாய் பணமும், 132 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து சேகர் ரெட்டி, பிரேம்குமார், சீனிவாசலு, திண்டுக்கல் ரத்தினம், முத்துபேட்டை ராமச்சந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
சட்ட விரோதமாக ரூபாய் நோட்டுக்களை மாற்றியதாக சி.பி.ஐ அவர்கள் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தது.
அவர்கள் அனைவரும் ஜாமின் கோரி சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோருக்கு மட்டும் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இதனையடுத்து சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோர் சி.பி.ஐ.நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தனர்.
பின்னர், 3 பேருக்கும் ஜாமீன் வழங்கியது சி.பி.ஐ நீதிமன்றம். இதைதொடர்ந்து அமலாக்கத்துறை உடனே அவர்கள் மூன்று பேரையும் அதிரடியாக கைது செய்து வழக்கு பதிவு செய்தது.
தொடர்ந்து மூன்று பெரும் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம் மூன்று பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. மேலும் மூன்று பேரும் தினமும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டது.