ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு! தலைமை ஆசிரியரிடம் போலீசார் விசாரணை!

First Published Mar 1, 2018, 5:14 PM IST
Highlights
Sexual harassment to the fifth grade student Police investigate headmaster


ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரி, பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசாரின் காலில் விழுந்து கதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், தலைமை ஆசிரியரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை, பெருங்குடியில் மான்ஃபோர்ட் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியரான பாதிரியார் ஜெயபாலன் இருந்து வருகிறார். இந்த பள்ளியில் எல்.கே.ஜி. முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை சுமார் இரண்டாயிரம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பெருங்குடி, கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்த பதினொன்று வயது சிறுமி, 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்த சிறுமி, கடந்த இரண்டு மாதங்களாக பள்ளிக்குச் செல்ல மறுத்து வந்துள்ளார். இது குறித்து, சிறுமியின் பெற்றோர் விசாரித்தபோது, தலைமை ஆசிரியர் ஜெயபாலன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியுள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர், பாதிரியார் ஜெயபாலன் மீது துரைப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், அந்த புகாரை போலீசார் வாங்க மறுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கிண்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதிரியாருக்க எதிராக புகார் கொடுத்துள்ளனர். அவர்களும் வாங்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், இன்று பள்ளியை முற்றுகையிட்டனர். தலைமை ஆசிரியர் ஜெயபாலனை வெளியே வருமாறு சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கூறியுள்ளனர். 

அப்போது அங்கு வந்த போலீசாரிடம் சிறுமியின் பெற்றோரும், உறவினர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தலைமை ஆசிரியரை தங்களிடம் ஒப்படைக்குமாறு, போலீசாரின் காலில் விழுந்து கேட்டுக் கொண்டனர்.

இதனை அடுத்து, நீலாங்கரை உதவி ஆணையர், சிறுமியின் பெற்றோரையும், உறவினர்களையும் சமாதானம் செய்து, மான்ஃபோர்டு பள்ளிக்கு முன்பு, புகாரை பெற்றுக் கொண்டனர். இந்த புகாரின் அடிப்படையில், பாதிரியார் ஜெயபாலனை, துரைப்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

click me!