
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “மதுரை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் ஊழல் நடைபெற்றுள்ளது. நகரமைப்பு பிரிவின் ஊழலுக்கு எதிராக அதிமுக சார்பில் போராட்டம் நடத்த உள்ளோம். அதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்க உள்ளோம். வீடுகளுக்கு அனுமதி பெற்று வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் கட்டப்படுகிறது. மதுரை மாநகராட்சி நிர்வாகம் மிக மோசமாக நடைபெறுகிறது.
மக்களின் பிரச்சினைகளை மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை, மாநகராட்சிக்கு மேயர், மண்டலத் தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் நியமிக்க வேண்டும். திமுக தங்கத்தை அள்ளி கொடுத்தாலும் திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். திமுக அரசு நான்கே முக்கால் வருடத்தில் மதுரை மக்களுக்கு என்ன செய்தது? அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக தொடங்கி வைக்கிறது. திமுக ஆட்சி வந்தவுடன் விமான நிலையம் விரிவாக்கத்திற்கு நிலம் எடுக்கும் பணிகள் 2 மாதங்களில் முடிவடையும் என சொன்னார்கள். ஆனால், கனிமொழி எம்.பியாக இருப்பதால் தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச தரத்துடன் செயல்படத் தொடங்கியுள்ளது.
முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என யார் என்ன பேசினாலும் அடுத்து ஆளப்போவது அதிமுக மட்டும. அதிமுகவை விமர்சனம் செய்யவில்லை என்றால் முதலமைச்சருக்கு நேரம் போகாது. தூக்கம் வராது, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் திமுகவின் அடிமைகளாக செயல்படுகிறது. ஆனால் அதிமுகவை அடிமை கட்சி என விமர்சனம் செய்கிறது. ஒரு அடிமை தான் இன்னொருவரை அடிமை என சொல்லுவார்கள். அதனால் தான் திமுக கூட்டணி கட்சிகள் எங்களை அடிமை என விமர்சனம் செய்கிறது.
அரிதாரம் பூசியவனால் ஆட்சி நடத்த முடியுமா என எம்.ஜி.ஆரை திமுக விமர்சனம் செய்தது. ஆனால், திமுகவை பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் செல்ல செய்தவர் எம்.ஜி.ஆர்.. எம்.ஜி.ஆர் மறைந்தும் திமுகவிற்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார். எம்.ஜி.ஆரின் புகழை பாடாதோர் எவருமுண்டா?, முதலமைச்சர் கூட எம்.ஜி.ஆரை பெரியப்பா என கூறினார். முதலமைச்சரின் பெரியப்பாவை கேலி, கிண்டல் செய்யும் திமுகவினரை முதல்வர் கண்டிக்க வேண்டாமா?" என பேசினார்.