காட்டிலும் தண்ணீர் தட்டுப்பாடு; தாகம் தீர்க்க வந்து, கிணற்றில் தவறி விழுந்த கடமான்…

First Published Jan 12, 2017, 8:41 AM IST
Highlights

ஒட்டன் சத்திரம் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் தாக தீர்க்க வந்த கடமான் அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்தது.

ஒட்டன்சத்திரம் வனப்பகுதியில் யானை, செந்நாய், சிறுத்தை, கடமான், சாம்பல்நிற அனில், காட்டெருமை, மலைப்பாம்பு, உடும்பு உள்பட பல்வேறு விலங்குகள் வாழ்கின்றன.

பருவமழை பொய்த்துப் போனதால் தற்போது காட்டுப்பகுதியிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வனவிலங்குகள் அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் தண்ணீரைத் தேடி மலையடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு வரும்.

நேற்று காலை 9 மணியளவில் வடகாடு ஊராட்சி பால்கடை மலைக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சின்னராசு (52) என்பவரின் தோட்டத்துக்குள் ஒரு கடமான் புகுந்தது. தண்ணீர்த் தேடி வந்த கடமான், தோட்டத்தில் உள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டது. சுமார் 20 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் 7 அடி வரை தண்ணீர் இருந்தது.

கிணற்றுக்குள் விழுந்த கடமான், அங்குள்ள மேடான பகுதியில் நின்று அலறிக் கொண்டிருந்தது. அப்போது, சென்ற சின்னராசு, கிணற்றுக்குள் கடமான் தவித்து கொண்டிருந்ததைப் பார்த்தார்.

உடனே, இதுகுறித்து ஒட்டன்சத்திரம் வனத்துறை மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வனச்சரகர் விஜயன், தீயணைப்பு நிலைய அலுவலர் ரங்கராஜு, வனவர் முகமது தாஜுதீன் மற்றும் வனத்துறையினரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பின்னர் அவர்கள், கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி சுமார் இரண்டு மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு கடமானை உயிருடன் மீட்டனர்.

கிணற்றில் விழுந்தது ஆண் கடமான் ஆகும். இதற்கு ஆறு வயது இருக்கும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட கடமானை அடர்ந்த வனப்பகுதியில் விட்டதும் துள்ளிக்குதித்து ஓடியது.

click me!