20 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்ட சாலை - குண்டும், குழியுமாக இருப்பதால் மக்கள் அவதி...

First Published Mar 20, 2018, 8:21 AM IST
Highlights
road that has been renovated 20 years ago people suffering due damaged road


நீலகிரி

20 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைப்பட்ட சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் மாணவர்கள், முதியவர்கள், நோயாளிகள் என மக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதால் அதனை சீரமைத்து தரக்கோரி ஆதிவாசி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார். 

இந்தக் கூட்டத்தில் மக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுத்தனர். அதன்படி, கூடலூர் அருகே உள்ள மச்சிக்கொல்லி, புழம்பட்டி கிராமங்களை சேர்ந்த ஆதிவாசி மக்கள் சாலையை சீரமைத்து தரக்கோரி புகைப்படத்துடன் மனு அளித்தனர். 

அந்த மனுவில், "கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட மச்சிக்கொல்லி முதல் புழம்பட்டி வரை ஒன்றரை கிலோ மீட்டர் சாலை மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. 

சாலை முழுவதிலும் கற்கள் பெயர்ந்து கிடப்பதால் மக்கள் நடந்து செல்ல முடியவில்லை.  அந்த வழியாக வாகனங்களை இயக்கவும் சிரமமாக உள்ளது. 

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்த சாலை சீரமைப்பட்டது. அதன்பின்னர் குறைந்த தூரமே சாலை சீரமைக்கப்பட்டு, பணி முடிவடைந்தது என்று பலகை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த சாலை வட்டிகொல்லி, பீச்சனக்கொல்லி, செம்பக்கொல்லி ஆகிய ஆதிவாசி காலனிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாகும். கடந்த பல ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாமல் உள்ளதால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ -மாணவிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். மேலும், முதியவர்கள், நோயாளிகள் சிரமம் அடைகின்றனர். 

இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அரசு பேருந்தில் ஏற வேண்டிய நிலை உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கி சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 

click me!