சாராயக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு; உதவி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்…

First Published Aug 12, 2017, 9:31 AM IST
Highlights
Resistance to setting up a shop People who besieged the Assistant Collector office ...


திருப்பூர்

தாராபுரத்தில் சாராயக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உதவி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா குண்டடம் ஒன்றியம் நந்தவனப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது தும்பலப்பட்டி கிராமம். இங்கு 200–க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் இதுவரை டாஸ்மாக் சாராயக் கடை எதுவும் இல்லை. இந்த நிலையில் தற்போது, இந்தக் கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் சாராயக் கடை திறக்க அதிகாரிகள் முயற்சி எடுத்து வருகின்றனர்.

இதற்காக தனியாருக்குச் சொந்தமான இடத்தை அதிகாரிகள் தேர்வு செய்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் சாராயக் கடை அமைக்க கலால் துறையினர் தேர்வு செய்த இடத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய தும்பலப்பட்டிக்கு சென்ற போதுதான் அந்தப் பகுதி மக்களுக்கே டாஸ்மாக் சாராயக் கடை அமைய உள்ள விவரம் தெரிய வந்தது.

அதன்பிறகு கிராம மக்கள் அதிகாரிகளைச் சந்தித்து டாஸ்மாக் கடை திறக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். அதிகாரிகள் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்றக் கொள்ளவில்லை.

இதையடுத்து நில உரிமையாளரிடம் சென்று இந்த கிராமத்தில் டாஸ்மாக் சாராயக் கடை வந்தால், இங்குள்ள விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே டாஸ்மாக் சாராயக் கடைக்கு இடம் தரவேண்டாம் என்று கிராம மக்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால், அவரும் மக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று தாராபுரம் உதவி ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அங்கு அவர்கள், தங்கள் கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் சாராயக் கடை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், அங்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். பின்னர் போராட்டத்தை கைவிட்டு மக்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

click me!