ரெட் பஸ் இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலமாக எடுக்கப்பட்ட பஸ் டிக்கெட்டுகள் செல்லுபடியாகும் என அதன் நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
பொங்கலுக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் சென்னை மற்றும் வெளியூர்களில் இருக்கும் மக்கள் பொங்கலை கொண்டாட தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு வருகின்றனர்.
இதற்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர். இருப்பினும் ஆம்னி பஸ்களை போன்று மக்களுக்கு சவுகரியம் அளிக்கும் வகையில் அவை இல்லை என்பது பலரது கருத்தாக உள்ளது.
இந்நிலையில் ரெட் பஸ் இணையதளம் மற்றம் மொபைல் ஆப் மூலமாக சுமார் 2 லட்சம் டிக்கெட்டுகள் பொங்கலையொட்டி முன் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில்தான் “ரெட் பஸ் மூலம் புக்கிங் செய்யப்பட்ட டிக்கெட்டுகள் செல்லாது” என்று, நேற்று முன்தினம் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அதிரடி அறிவிப்பை வெளியிட்டனர். இது 2 லட்சம் பயணிகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.
இதற்கு ரெட் பஸ் இணையதளத்திற்கும், ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கும் இடையே நிலவிய மோதல்தான் காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ரெட் பஸ் நிர்வாகி கிருஷ்ணன், ரெட் பஸ் மூலமாக புக் செய்யப்பட்ட டிக்கெட்டுகள் செல்லுபடியாகும் என்று தெரிவித்துள்ளார்.