வாங்கிய பணத்தை தராததால் ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்; கத்தி முனையில் கடத்திய மூவர் கைது...

First Published Jun 8, 2018, 11:02 AM IST
Highlights
Real estate agent kidnapping because he did not buy money Three arrested for smuggling


கோயம்புத்தூர்
 
கோயம்புத்தூரில் வாங்கிய பணத்தை திருப்பி தராததால் கத்தி முனையில் ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தப்பட்டு சேலத்தில் மீட்கப்பட்டார். கடத்திய மூவரை காவலாளர்கள் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டம், பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜான் கோ பிடல் (45). இவர், கன்னியாகுமரியைச் சேர்ந்த கரிகாலன் (40) என்பவருடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அதற்காக பாப்பநாயக்கன்பாளையத்தில் அலுவலகமும் வைத்திருந்தனர். 

இந்த தொழிலுக்காக கரிகாலன் ரூ.15 இலட்சம் மற்றும் 36 சவரன் நகை ஆகியவற்றை கொடுத்தாராம். அந்த நகை -  பணத்துக்கு அவர் வட்டியும் வாங்கி வந்தார்.

இதற்கிடையே, ரியல் எஸ்டேட் தொழில் நலிவடைந்ததால் போதிய வருமானம் கிடைக்கவில்லை. எனவே, இந்தத் தொழிலில் இருந்து தான் விலகி விடுவதாகவும், தான் கொடுத்த நகை - பணத்துக்காக ரூ.22 இலட்சத்தை திரும்ப கொடுக்க வேண்டும்  என்று  கரிகாலன் அவரிடம் கேட்டார். அதற்கு ஜான் கோ பிடல் கொடுப்பதாக கூறினார்.

தனது சொந்த ஊருக்கு சென்ற கரிகாலன், பலமுறை ஜான் கோ பிடலை தொடர்புகொண்டு நகை - பணத்தை கேட்டுள்ளார். அதற்கு அவர், விரைவில் கொடுத்து விடுவதாக கூறினாராம். ஆனால், நகை, பணத்தை கொடுக்கவில்லை. 

இதுபற்றி செல்போன்மூலம் தொடர்பு கொண்டு பேசியபோது அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கரிகாலன் நேற்று மதியம் 1½ மணியளவில் தனது நண்பர்கள் 9 பேருடன் 2 காரில் கோவை வந்தார். 

அவர் பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்த ஜான் கோ பிடலிடம் ரூ.22 இலட்சம் கேட்டு தகராறு செய்தார். அப்போது அவர் பணத்தை கொடுக்க மறுத்துள்ளார். 

இதனால் ஆத்திரம் அடைந்த கரிகாலன், கத்தி முனையில் ஜான் கோ பிடலை காருக்குள் தூக்கிப்போட்டுக் கொண்டு தனது நண்பர்களுடன் தப்பிச்சென்றார்.

இந்த சம்பவம் குறித்து கோவை ரேஸ்கோர்ஸ் காவலாளர்கள் வழக்குப்பதிந்து 2 கார்களில் தப்பி சென்ற கரிகாலன் மற்றும் அவருடன் வந்த கும்பலை வலைவீசி தேடி வந்தனர். மேலும் இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவலாளர்கள் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கொங்குப்பட்டியில் கார் இருப்பதாக ஓமலூர் துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கருக்கு தகவல் தெரிவித்தனர். 

பின்னர், துணை காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் தீவட்டிப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி மற்றும் காவலாளரள் சம்பவ இடத்திற்கு நேற்று இரவு சுமார் 9 மணியளவில் அங்கு சென்றனர். 

அப்போது வேறு காரில் ஜான் கோ பிடலை மாற்றி கொண்டு அந்த கும்பல் தப்பியது தெரியவந்தது. இதனையடுத்து தீவட்டிப்பட்டி வாகன சோதனை நிலையத்திற்கு காவலாளர்கள் தகவல் கொடுத்தனர். அதன்பின்னர் அங்கு விரைந்து சென்று காரை பிடித்து கடத்தப்பட்ட ஜான் கோ பிடலை காவலாளர்கள் மீட்டனர்.

மேலும் அவரை கடத்திய தர்மபுரி மாவட்டம் பிடமனேரி பகுதியை சேர்ந்த கார்த்திக் (36), ஈரோடு மாவட்டம் கருக்கல்பாளையம் பகுதியை சேர்ந்த முருகன் (37), சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (25) ஆகிய மூவரையும் காவலாளர்கள் மடக்கி பிடித்தனர். காரில் இருந்த ஒரு கத்தி, கொடுவாள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

இந்த தகவல் ரேஸ்கோர்ஸ் காவலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டதின்பேரில் அவர்கள் ஓமலூர் காவல் நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் மீட்கப்பட்ட ஜான் கோ பிடல் மற்றும் கைதானவர்களை ஓமலூர் காவலாளர்கள் ஒப்படைத்தனர். 

இந்த வழக்கில் தப்பி ஓடிய மற்றவர்களை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகிறார்கள். 
 

click me!