அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை முடக்கிய பதிவாளர் இடமாற்றம்!!

First Published Aug 2, 2017, 11:30 AM IST
Highlights
pudukottai registrarr transferred due to block vijayabaskar properties


தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த ஊரான திருவேங்கை வாசலில் உள்ள அவருக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலம், அவரது குவாரி உட்பட விஜயபாஸ்கரின் சொத்துக்கள் முழுவதையும் வருமான வரித்துறை முடக்கியது. மேலும், மாவட்ட பதிவாளரை பணியிட மாற்றம் செய்து, அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 12ம் தேதி ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதிக்கு இடை தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில், சசிகலா அணி சார்பில் டிடிவி.தினகரன், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ் உள்பட பலர் போட்டியிட்டனர்.

வேட்பாளர் டிடிவி தினகரன் சார்பில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதில், அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து, தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அதேபோல், சென்னை எழும்பூர் மற்றும் புதுக்கோட்டையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் மயிலாப்பூரில் உள்ள அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு, அலுவலகம் என சுமார் 30 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனைகளின் போது, பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ரூ 5.13 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக, ரூ.89 கோடி வழங்கப்பட்டதாகவும், அந்த பணம் யார் யாரிடம் உள்ளது என்ற ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதுதொடர்பான ஆவணங்கள் குறித்து விளக்கமளிக்க, அமைச்சர் விஜயபாஸ்கரை நேரில் ஆஜராக வருமானவரித்துறை மீண்டும் அனுப்பியது. இதையடுத்து, அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் 5 மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதேபோல, அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை மற்றும் சகோதாரர், உறவினர்கள், நண்பர்களிடமும் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்கள் முழுவதையும் வருமானவரித்துறை முடக்கியுள்ளது. மேலும், விஜயபாஸ்கரின் சொந்த ஊரான திருவேங்கை வாசலில் உள்ள 100 ஏக்கர் நிலமும், அவரது குவாரியையும் வருமான வரித்துறை முடக்கியுள்ளது.

மேலும், அமைச்சரின் நிலத்தை முடக்க புதுக்கோட்டை மாவட்ட நில பதிவாளருக்கும் வருமான வரித்துறை கடிதம் அனுப்பியது. அதன்பேரில், அவரது சொத்துக்கள் அனைத்து முடக்கப்பட்டன.

இந்நிலையில், அமைச்சரின் சொத்துக்களை முடக்கிய, மாவட்ட பதிவாளர் சசிகலா, திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  இதனால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

click me!