
சென்னை மெரினா கடற்கரையில் காவல்துறை உயர் அதிகாரிகள் திடீரென ஆய்வு நடத்தியுள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும், டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் சென்னை மெரினாவில் இளைஞர்கள் இன்று கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். திருச்சி, மதுரை, கோவையிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே பலத்த பாதுகாப்பையும் மீறி மெரினாவில் இளைஞர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தியது காவல்துறையினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனைத் தொடர்ந்து மெரினா கடற்கரைக்குச் சென்னை மயிலாப்பூர் இணை ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெரினாவில் மீண்டும் இளைஞர்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க கூடுதல் போலீசார் குவிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் செல்போன் மூலம் தகவல் பகிர்வதை தடுக்கும் விதமாக ஜாமர் கருவிகளை பொருத்தவும் காவல்துறை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.