காளைகள் பற்றி தெரியுமா? - கோபத்துடன் பேட்டியை விட்டு ஓடிய விலங்குகள் நல ஆர்வலர் ராதாராஜன்

First Published Jan 12, 2017, 5:31 PM IST
Highlights

ஜல்லிக்கட்டுக்கு உடனடியாக தீர்ப்பு சொல்ல முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு போட்ட விலங்குகள் நல ஆர்வலர் ராதாராஜன் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் ஆத்திரத்தில் பாதியில் ஓட்டம் பிடித்தார்.

இது பற்றி தனியார் தொலைக்காட்சி பேட்டி :

கே: ஜல்லிக்கட்டு பற்றி உடனடியாக இப்போது தீர்ப்பளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதே அதை எப்படி பார்க்கிறீர்கள்? 

நான் இதைத்தான் எதிர்பார்த்தேன். சுப்ரீம் கோர்ட் மீது பிரஷர் போடுவது போல் உள்ளது இவர்கள் செயல்பாடு, அவர்கள் விசாரணை அடிப்படையில் தீர்ப்பளிப்பார்கள் என்பது தான் நடைமுறை. ஆகவே இது தான் சரியான நிலை.

சுரீம் கோர்ட் ஆர்டரை மீறி நடத்தினால் அது நீதிமன்ற அவதூறு ஆகும் . தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவதை விட சட்டப்படி வழக்கை சந்திக்க வேண்டும்.

கே: அப்படியானால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்காது என்ற நிலையில் என்ன செய்தால் தடையை நீக்க முடியும்? 

எதையும் சட்டப்படித்தான்  செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு காளைகளை பிராணிகள் வதை தடை சட்டத்தின் கீழ் வராது என்ற ரீதியில் சட்டம் கொண்டு வரவேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் வதைக்கப்படவில்லை என்கிற ரீதியில் சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும். ஆனால் அதற்கு முன்னர் இப்போது உள்ள விலங்குகள் நல வாரியம் ஒத்துகொள்ளாது. 

அதற்கு மத்திய அரசு அந்த வாரியத்தை கலைக்க வேண்டும்.(கேலியாக சொல்கிறார்) கலைத்துவிட்டு புதிய உறுப்பினர்களை நியமித்து அவர்கள் காளைகள் வதைக்கப்படவில்லை என்று சான்றிதழ் தரவேண்டும். அப்படி சான்றிதழ் பெற்று அதன் மூலம் சட்டம் கொண்டுவரலாம். (மீண்டும் கிண்டலாக சொல்கிறார்)

கே: தமிழர்களின் உணர்வு பூர்வமான விளையாட்டு ஜல்லிக்கட்டு அதை எதிர்ப்பது கலாச்சாரத்தை எதிர்ப்பது போன்றதாகாதா?

இது என்ன கலாச்சாரம். என்ன விளையாட்டு, ஜல்லிக்கட்டில் என்ன இருக்கு கலாச்சாரம். இதில் என்ன தமிழர் உணர்வு உள்ளது.  நானும் தமிழச்சி தான். எனக்கும் உணர்வு உண்டு , ஜல்லிக்கட்டு  சில மாவட்டங்களில் மட்டுமே நடக்கிறது. ஜல்லிக்கட்டை விளையாடித்தான் ஆண்கள் தங்கள் கலாச்சாரத்தை நிருபிக்க வேண்டுமா? 

இவர்களுக்கு எப்படி ஆதரிக்க உரிமையுள்ளதோ அதே போல் எதிர்த்து பேட்டியளிக்க வழக்கு தொடுக்க எனக்கு உரிமை உள்ளது. நானும் தமிழ் கலாச்சாரத்தில் வளர்ந்தவல்தான். என் மீது சேற்றை வாரி இரைக்க கூடாது.

கே: காளைகள் துன்புறுத்தபடுவதாக சொல்கிறீர்கள்? பாரம்பரியமிக்க இந்த விவகாரத்தில் காளைகளை பற்றி எந்த அளவுக்கு அறிந்திருக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?

நீங்கள் ஏதோ என்னிடம் போராடுவது போல் தெரிகிறது ( கடுமையாக கோபத்துடன் பேசுகிறார்). ஜல்லிக்கட்டு குரூயல் அவ்வளவுதாங்க , பெண்கள் கலாச்சாரத்தை ஜல்லிக்கட்டை விளையாடியா நிருபிக்கிறார்கள்? அது என்னங்க ஆண்கள் மட்டும் ஜல்லிக்கட்டை விளையாடி கலாச்சாரத்தை நிருபிப்பது. 

கே: நீங்கள் வெளிநாட்டு நிறுவனங்களிடம் பணம் பெற்று இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளதே?

சாரி , நான் ... எனக்கு வர்ற கோபத்தில் என்ன வேணா சொல்வேன், இவர்கள் புத்திசாலிகள் மற்றவர்கள் முட்டாள்களா? , சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் முட்டாள்களா? நான் ஏன் வெளிநாட்டு பணத்தை வாங்க வேண்டும். என்ன பேச்சு இது. நான் 10 ஆண்டுகளாக நாய்களுக்கு சோறு போடுகிறேன். இவர்கள் யாராவது பணம் கொடுத்தா செய்கிறேன். கோபமடைந்த அவர் தொடர்பை துண்டித்து விட்டார்.

சாதாரண வாதத்துக்கே நிதானமிழந்து ஓடும் இவர்கள் பல்லாயிரம் ஆண்டு ஜல்லிக்கட்டை தடை செய்ய சாதாரணமாக என்ன பாரம்பரியம் , என்ன கலாச்சாரம், என்ன ஜல்லிக்கட்டு என்று கேட்கின்றனர். அதற்கும் தமிழக மக்கள் பொறுமையாக பதிலளித்துகொண்டுத்தான் இருக்கின்றனர். 

click me!