நாமக்கல்
தண்ணீர் கேட்டு வெற்றுக் குடங்களுடன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு வந்த மக்கள் ஆட்சியர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.
நாமக்கல் மாவட்டம், வேலகௌண்டம்பட்டி அருகே உள்ள மானத்தி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நேற்று வெற்றுக் குடங்களுடன் ஆட்சியர் அலுவலகம் திரண்டு வந்தனர். அவர்கள் அனைவரும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆட்சியர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
அதன்பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம், "மானத்தி கிராமத்தில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் நாள்தோறும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
ஆனால், சமீபகாலமாக பழைய காலனி பகுதிக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்வதில்லை. மூன்று நாள்களுக்கு ஒருமுறை இரண்டு அல்லது மூன்று குடம் என்ற அளவில் மிகவும் குறைவான அளவே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, குடிநீர் தொட்டிக்கு அருகே பைப்-லைன் அமைத்து சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர்கள் தெரிவித்தனர்.