”சுற்றுச்சூழலை பாதுகாக்க தவறிவிட்டது...” - ஓஎன்ஜிசியின் குட்டு ஆய்வில் அம்பலம்...

First Published Aug 9, 2017, 3:34 PM IST
Highlights
ONGC engaged in oil processing in Tamil Nadu delta areas The Integrity Committee on Justice and Responsibility has stated that environmental damage has been caused by the company.


தமிழக டெல்டா பகுதிகளில் எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக நீதி மற்றும் பொறுப்பேற்புரிமைக்கான ஒருமைப்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே கதிராமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் பெட்ரோல் - கேஸ் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுவதாக இப்பகுதி மக்கள் புகார் கூறி வந்தனர்.

இதைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் ராட்சத இயந்திரங்கள் மூலம் புதிய விரிவாக்க பணிகளில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஈடுபட்டது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பேராசியரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் தற்போது நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நீதி மற்றும் பொறுப்பேற்புரிமைக்கான ஒருமைப்பாட்டுக் குழு இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்தியது. இந்த சந்திப்பின்போது, அண்மையில் எடுக்கப்பட்ட அறிவியல் ஆய்வு முடிவு ஒன்றையும் வெளியிட்டது.

அதில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்ட பகுதிகளில் மண், நீர் ஆகியவை அறிவியல் பூர்வமான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் முடிவில், சுற்றுச்சூழலை ஓ.என்.ஜி.சி. நிறுவனம், பாதுகாக்க தவறியுள்ளது நிரூபணமாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலேயே எண்ணெய் எடுக்கப்படுவதாக கூறப்படுவது முற்றிலும் உண்மையில்லை என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் செயல்பாட்டால், டெல்டா பகுதிகளில், நிலத்தடி நீரும், வேலூர் மாவட்டத்துக்கான நீர்க் கால்வாய்களும் அதிக அளவில் மாசடைந்துள்ளன என்றும் கூறியுள்ளனர்.

மேலும், இது தொடர்பாக மூன்றாம் நபர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கிராம மக்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும், தவறு செய்த அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆய்வில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர்.

click me!