
நாளை மறுநாள் நவம்பர் 26 ம் தேதி முதல் 28 ம் தேதி வரை தமிழகத்தின் தென்கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் 28 ஆம் தேதி வட கிழக்கு பருவமழை தொடங்கியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், சாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த மாவட்டங்களில் ஏரிகள், குளங்கள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதே நேரத்தில் பிற மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் இன்னும் வறட்சி நிலவுகிறது. விவசாயப் பணிகளும் தொடங்கவில்லை.
இந்நிலையில் நாளை மறுநாள் முதல் முதல் 28 ஆம் தேதி வரை தமிழக தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தமானது மேற்கு மற்றும் தென்மேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது என்றும் , இதன் காரணமாக நவம்பர் 26ம் தேதி முதல் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 5 நாட்களை பொறுத்தவரையில் நவம்பர் 26 ம் தேதி முதல் நவம்பர் 28 வரை தமிழகத்தின் தென் கடலோர மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.