திருமணம் முடிந்தவுடன் ஸ்டெர்லைட் போராட்டததில் பங்கேற்ற புதுமண தம்பதி!

First Published Apr 16, 2018, 3:53 PM IST
Highlights
New married couples participated in protest against sterlite


தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம் வளாகத்தில் நடைபெறும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் புதுமண தம்பதியர் கலந்து கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 64 நாட்களாக நடைபெறும் இந்த போராட்டத்தில் சங்கரப்பேரி, மீளவிட்டான், தெற்கு வீரபாண்டியாபுரம், சில்வர்புரம், பண்டாரம்பட்டி உள்ளிட்ட 9 கிராம மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

வியாபாரிகள், மாணவர்கள், சமூக அமைப்புகள், லாரி ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என பல தரப்பினரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, தூத்துக்குடி பனிமய அன்னை பேராலயம் முன்பாக நேற்று கருப்புக்கொடி ஏற்றப்பட்டும், கருப்பு பலூன் பறக்கவிடப்பட்டும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அப்போது பனிமய அன்னை பேராலய வளாகத்துக்குள் பந்தல் அமைக்கப்பட்டு, இன்று 2-வது நாளாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. திரு இருதய பேராலயத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஜோசப் வாஸ் மற்றும் சைனி ஆகியோருக்கு இன்று திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்ததும், ஜோசப் மற்றும் சைனி பனிமய அன்னை பேராலய வளாகத்துக்குள் வந்தனர். அப்போது போராட்டம் நடத்தியவர்களுடன் அமர்ந்து அவர்களும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

மீசையை முறுக்கு... ஸ்டெர்லைட் ஆலையை நொறுக்கு என்ற வாசகம் தாங்கிய அட்டையை ஏந்திக் கொண்டு அவர்கள் கோஷமிட்டனர். திருமணத்துக்கு வந்தவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

அப்போது பேசிய புதுமண தம்பதிகள், எங்க ரெண்டு பேருக்கும் சொந்த ஊர் தூத்துக்குடிதான். இந்த ஸ்டெர்லைட் ஆலையினால், என்னென்ன பாதிப்புகள் என்பது நன்றாகவே தெரியும். 64 நாட்களாக கிராமத்து மக்கள் தொடர்ந்து போராட்டிக்கிட்டு வர்றாங்க... ஆரம்பத்தில் இந்த ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் தலை தூக்கும்போதெல்லாம் சாதி, மதத்தைக் காரணம் காட்டி மக்களின் ஒற்றுமை சீர்குலைக்கப்பட்டது. ஆனால், தற்போது மக்களின் ஒற்றுமை வலுவாக உள்ளது என்று கூறினர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்துக்கு சாலை ஓரத்தில் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால், மாதா கோயில் வளாகத்தில் பந்தல் அமைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், தற்போது கிறிஸ்தவர்கள் போராட்டம் என போராட்டத்தை ஒடுக்கப் பார்க்கின்றனர் சிலர். இது சாதி, மதம்
சாராத உயிர்வாழ்வதற்கான தூத்துக்குடி மக்களின் போராட்டம் என்று ஜோசப் கூறினார்.

click me!