வாராக் கடன்களை வசூலிக்க கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டுமாம் - வங்கி ஊழியர்கள் கேட்கிறார்கள்...

First Published May 11, 2018, 11:16 AM IST
Highlights
Must have serious legislation collect debts - bank employees demonstrated ...


திருவண்ணாமலை

வாராக் கடன்களை வசூலிக்க கடுமையான சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி திருவண்ணாமலையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், பெரிய தெருவில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எதிரே, திருவண்ணாமலை மாவட்ட வங்கி ஐக்கிய ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வங்கி ஐக்கிய ஊழியர்கள் சங்கக் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப.க.கோவிந்தராஜன் தலைமை வகித்தார்.

இதில், ஸ்டேட் வங்கியின் ஊழியர்கள் சங்க மண்டல செயலாளர் சுந்தரராஜன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகி ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

மேலும், ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க வட்டாரச் செயலாளர் எம். இளஞ்செழியன், இந்தியன் வங்கி அதிகாரிகள் சங்கச் செயலாளர் மகேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், "இந்திய வங்கி கூட்டமைப்பு, வங்கி அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு நடத்திய பேச்சுவார்த்தையில் வங்கி ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட 2 சதவீத ஊதிய உயர்வைவிட அதிகப்படியான ஊதிய உயர்வு வழங்க வேண்டும். 

வாராக் கடன்களை வசூலிக்க கடுமையான சட்டத்தை கொண்டுவர வேண்டும். 

வங்கிகள் தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும். 

அனைத்து மக்களுக்கும் வங்கிச் சேவையை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மே மாதம் இறுதியில் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்யப்பட்டது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு வங்கிகளின் அதிகாரிகள், ஊழியர்கள், 9 சங்கங்களின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
 

click me!