ஆட்சியர் அலுவலகத்தில் மாமியார், மருமகள்கள் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு…

First Published Aug 23, 2017, 8:29 AM IST
Highlights
mother in law and daughter in laws tried to burn in collector office


கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்திற்கு கைக்குழந்தையுடன் வந்த மாமியார், மருமகள்கள் தீக்குளிக்க முயற்சித்ததால் கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள சிகினிகொல்லை பகுதியைச் சேர்ந்தவர் ராமன். இவருடைய மனைவி சரோஜா. இவர்களுடைய மருமகள்கள் நந்தினி, பத்மா, சசிகலா ஆகியோர் ஒரு கைக்குழந்தையுடன் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அவர்கள் ஆட்சியர் அலுவலகம் எதிரே தாங்கள் கொண்டு வந்திருந்த பிளாஸ்டிக் கேனில் இருந்த மண்ணெண்ணையை தங்கள் உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர்.

அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலாளர்கள் அவர்களை தடுத்து, உடலில் தண்ணீரை ஊற்றி ஆட்சியரிடம் அழைத்து சென்றனர்.

பின்னர் அவர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்தனர். அதில், “எங்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் வீடுகட்டி வசித்து வருகிறோம். வீட்டிற்கு சென்றுவர காலம், காலமாக அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள பொதுவழியில் சென்று வந்தோம்.

இந்த நிலையில், அந்த வழியில் செல்லக்கூடாது என சிலர் பிரச்சனை செய்து வருகின்றனர். இதனால் நாங்கள் வீட்டிற்கும் செல்ல முடியாமல், வெளியிலும் செல்ல முடியாமல் தவித்து வருகிறோம்.

கடந்த மாதம் 30-ஆம் தேதி அந்த பொதுவழியில் சென்ற நந்தினி, பத்மா, சசிகலா ஆகியோரை தாக்கியுள்ளனர். இதனால் அவர்கள் மூன்று பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்தனர்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, இந்த பிரச்சனைக் குறித்து விசாரித்து உரிய தீர்வு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம்” என்று அந்த மனுவில் தெரிவித்து இருந்தனர்.

இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க பர்கூர் காவலாளர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டதன்பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

click me!