18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செல்லுமா? செல்லாதா? உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை..!

First Published Oct 9, 2017, 10:29 AM IST
Highlights
mla disqualified case hearing today in chennai high court


தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரிக்கப்படுகிறது.

முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை திரும்பப்பெற்றதால் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். தகுதிநீக்கத்தை எதிர்த்து எம்.எல்.ஏக்கள் தாக்கல் செய்த மனு, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுடன் சேர்த்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 4-ம் தேதி விசாரிக்கப்பட்டது. நீதிபதி ரவிச்சர்ந்திர பாபு முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.

அப்போது, தகுதிநீக்கம் தொடர்பாக எம்.எல்.ஏ-க்களுக்கு உரிய அவகாசம் அளிக்கவில்லை. அதுதொடர்பான உத்தரவையும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அறிவிக்கவில்லை. அரசிதழில் வெளியிடப்பட்ட பின்னரே, தபால்மூலம் உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டது. கட்சி சாராமல் செயல்படவேண்டிய சபாநாயகர், முதலைமைச்சரின் ஆலோசனையின்படி செயல்பட்டுள்ளார் என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன. 

ஆட்சியைக் கலைக்க முயற்சி செய்ததாலேயே, எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்ததாக சபாநாயகர் தனபால் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திர பாபு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது. 

இதையடுத்து வழக்கின் விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பாக உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிடுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 

click me!