மருத்துவ காப்பீடு அடையாள அட்டையை உடனே வழங்க வேண்டும் – விஏஓ-க்கள் தீர்மானம்…

First Published Jul 17, 2017, 6:46 AM IST
Highlights
Medical Insurance Identity Card must be issued immediately - VAOs Resolution


விழுப்புரம்

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டையை உடனடியாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்க வேண்டும் என்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்டப் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க விழுப்புரம் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திர்கு மாவட்டத் தலைவர் பெரியாப்பிள்ளை தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் பெரியதமிழன், மாவட்டத் தலைமை நிலையச் செயலாளர் மூர்த்தி, வட்டத் தலைவர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் புஷ்பகாந்தன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் சுப்பிரமணியன், மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று சங்கச் செயல்பாடுகள் குறித்துப் பேசினர்.

இக்கூட்டத்தில், “கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்களை மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரின் முன் அனுமதி பெறாமல் மாறுதல் செய்வதை கண்டிப்பது,

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டையை உடனடியாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்க வேண்டும்,

அரசு ஆணைப்படி விழுப்புரம் மாவட்டத்தில் நில அளவை பயிற்சி முடித்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு 42 நாள்கள் நிர்வாக பயிற்சி அளிக்க மாவட்ட வருவாய் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” உள்ளிட்டப் பல்வேறுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்ட இணைச் செயலாளர் கண்ணதாசன், மாவட்ட அமைப்புச் செயலாளர் இந்திரகுமார், தமிழ்நாடு முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநிலச் செயலாளர்கள் ராஜி, பரமானந்தன், வட்டச் செயலாளர் மணிகண்டன், வட்டப் பொருளாளர் எழிலன் உள்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தின் இறுதியில் மாவட்டப் பொருளாளர் சிவக்குமார் நன்றித் தெரிவித்தார்.

click me!