தஞ்சாவூர்
பசுமை மற்றும் இலவச வீடுகள் ஒதுக்கீடு செய்ததிலும், பொதுநிதியை பயன்படுத்துவதிலும் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது என்றும் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆட்சியர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் புகார் மனு கொடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகள் நேற்று வருகை தந்தனர். இவர்களுக்கு அக்கட்சியின் பூதலூர் ஒன்றியச் செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.
அவர்கள் ஆட்சியர் அண்ணாதுரையிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில், "பூதலூர் ஒன்றியம் வெண்டையம்பட்டி ஊராட்சியில் மத்திய அரசின் பிரதமரின் ஆவாஸ் யோஜனா கிராமின் மற்றும் மாநில அரசின் பசுமை வீடு ஆகிய இலவச வீடு கட்டும் திட்டம், கழிப்பறை கட்டும் திட்டம், தெருவிளக்கு பராமரிப்பு போன்றவற்றிலும், பொதுநிதியை பயன்படுத்துவதிலும் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது.
இந்த ஊழல் சம்பந்தமாக ஏற்கனவே பலமுறை மனு அளித்து முறையிட்டோம். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, தாங்கள் (ஆட்சியர்) நேரில் வந்து ஆய்வு நடத்தி ஊழலில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறியிருந்தனர்.
பின்னர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், "ஊழலை அம்பலப்படுத்தியவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது. இலவச வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டவர்கள் உண்மையான பயனாளிகள் அல்ல. 37 வீடுகள் ஒதுக்கியதில் ஊழல் நடந்துள்ளது.
இந்த ஊழலில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், அரசு நலத்திட்டங்கள் தடையின்றி மக்களுக்கு சென்று சேர நடவடிக்கை எடுக்க கோரியும் வருகிற 28-ஆம் தேதி சானூரப்பட்டி கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்" என்று தெரிவித்தனர்.