டாஸ்மாக் போராட்ட செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளருக்கு அடி, உதை - கடம்பூர் ராஜு ஆட்கள் வெறிச்செயல்

First Published Apr 18, 2017, 5:25 PM IST
Highlights
kadambur raju supporters attacked reporter


தூத்துக்குடியில் மதுக்கடைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியதை செய்தியாக வெளியிட்ட பத்திரிகையாளர்கள் மீது அமைச்சர் கடம்பூர் ராஜூவின் தீவிர ஆதரவாளர் தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரில் புதிய மதுபானக் கடையை அமைக்கப்பட்டது. ஆனால் குடியிருப்பு பகுதியில் மதுக்கடை அமைக்க அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மதுக்கடையை ஒட்டிய பாரை நடத்துவதற்கான உரிமத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூவின் தீவிர ஆதரவாளர் ஒருவர் பெற்றிருந்தார்.

மக்களின் தொடர் போராட்டத்தால் மதுக்கடையை திறப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்தச்சூழலில் நேற்று கடையை திறக்க அதிகாரிகள் முற்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்வை பத்திரிகையாளர்கள் சேகரித்து செய்தியாக வெளியிட்டனர்.

நாளிதழில் இச்செய்திகள் வெளியானதும் ஆவேசமடைந்த பார் உரிமையாளர்,  செய்தி எழுதிய தினகரன் மற்றும் தினமலர் நிருபர்களை கடுமையாக தாக்கினர். மேலும் அவர்கள் நடத்தி வந்த போட்டோ ஸ்டூடியோவிற்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து உதைத்தனர்.

தாக்குதல் நடத்தியவர் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூவின் தீவிர ஆதரவாளர் என்பதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாக பாதிக்கப்பட்ட செய்தியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

click me!