
வேலையே போனாலும் பரவாயில்லை..ஜல்லிகட்டுக்கு முழு ஆதரவு உண்டு..மாணவர்களை நெகிழ வைத்த எஸ்.ஐ..
ஜல்லிக்கட்டு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் டிராபிக் போலீஸ் எஸ்.ஐ., ஒருவர் சீருடையுடன் வந்து தனது ஆதரவை தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
தமிழத்தில் ஜல்லிக்கட்டு நடத்தியே தீர வேண்டும் என நடத்தப்பட்டு வரும் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததையடுத்து மதுரை அவனியாபுரம்,பாலமேடு, அலங்காநல்லுர் என தொடங்கிய போராட்டம் தமிழகம் முழுவதும் தகித்து பரவி வருகிறது.
கடந்த 16 ஆம் தேதி அலங்காநல்லுரில் தொடங்கிய இந்த போராட்டம் சென்னை, மதுரை, சேலம், வேலுர், திருப்பூர் என தொடர்ந்து தீயாய் பரவி வருகிறது. மதுரையில் மாணவர்கள் தமுக்கம் மைதானத்தில் இன்று இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தமுக்கம் மைதானம் அருகே பணியில் இருந்த டிராபிக் எஸ்.ஐ., சேகரன் என்பவர் சீருடையுடன் போராட்டம் நடத்திய மாணவர்கள் நடுவே வந்து இந்த போராட்டத்திற்கு எனது ஆதரவை தெரிவிக்கிறேன் என அனைவரையும் பார்த்து கை கூப்பி வணங்கினார்.
இதனை அங்கிருந்த மாணவர்கள் கைதட்டியும், விசில் அடித்தும் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய சேகரன் இந்த போராட்டம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. என்றும் எனது வேலையே போனாலும் பராவாயில்லை, நான் உங்களுக்கு ஆதரவு அளிப்பேன் என தெரிவித்தார்.
தொடர்ந்து சேகரனுக்கு நன்றி தெரிவித்த மாணவர்கள், நீங்கள் சீருடை போட்டுள்ளீர்கள், அதனால் போராட வேண்டாம் என்றும் உங்கள் குடும்பத்தை சேர்ந்த மகன், மகள்களை எங்கள் போராட்டத்தில் சேர அனுமதியுங்கள் எனக் கூறி அவரை வழி அனுப்பி வைத்தனர்.