
தமிழத்தில் ஜல்லிக்கட்டு நடத்தியே தீர வேண்டும் என நடத்தப்பட்டு வரும் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததையடுத்து மதுரை அவனியாபுரம்,பாலமேடு, அலங்காநல்லுர் என தொடங்கிய போராட்டம் தமிழகம் முழுவதும் தகித்து பரவி வருகிறது.
முதன்முதலாய் இப்போராட்டங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டவர்கள் மாணவர்கள்தான். அவர்கள் பற்ற வைத்த தீ மளமளவென தமிழகம் முழுவதும் பரவி வருகிறது.
குறிப்பாக அலங்காநல்லுர்,சென்னை மெரினா கடற்கரை, புதுச்சேரி கோவை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களும், மாணவர்களும் கொந்தளிப்பபுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 4 நாட்களாக பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் அவை திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து தமிழகம் முழுவதும் இன்று மாணவர்கள் வகுப்புகளை புறக்கனித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல்லில் தற்போது நடைபெற்று வரும் போராட்டத்தின்போது மாணவர்கள் இருவர் சரசரவென அங்கிருந்த செல்போன் கோபுரத்தின் மீது ஏறினர். கண்இமைக்கும் நேரத்தில் டவர் மீது ஏறிய அவர்கள், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கவில்லை எனில் அங்கிருந்து குதிக்கப்போவதாக எச்சரித்தனர்.
இதையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டு அவர்களை டவரில் இருந்து இறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.