
பிப்ரவரி 1ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு…ஊர்மக்கள் அறிவிப்பு…போராட்டம் வாபஸ் ஆகுமா?
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வரும் பிப்., 1 ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்களும் விழர் கமிட்யினரும் முடிவு செய்துள்ளனர். இந்த முடிவு அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதால் போராட்டம் வாபஸ் பெறப்படும் என தெரிகிறது.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூரில் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்நிலையில் ஜல்லிகிகட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி கடந்த 15 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் 16 ஆம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை மெரினா, மதுரை தமுக்கம், கோவை வஉசி அரங்கம் உட்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் போராட்டம் தீயாய் பரவியது. அலங்காநல்லூரில் கடந்த 6 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வந்தது.
இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு சார்பில் அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் நிரந்தரமாக ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என போராட்டம் தொடர்ந்தது.
அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் போராட்டக்கார்களை போலீசார் தடியடி நடத்தியும், வலுக்கட்டாயமாகவும் விரட்டி அடித்து வருகின்றனர்.
இந்நிலையில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து ஊர் கமிட்டி இன்று கூடியது. அதில் அவசரச் சட்டம் இயற்றப்பட்டதால், வரும் 1 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இதை விழாக்குழுவினர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். இதைத் தொடந்து பேசிய அவர்கள் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக தங்களுடன் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதையடுத்து அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் போராட்டம் வாபஸ் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.